முதல் நாளே அதிரடி.. தொகுதியில் கறார் காட்டிய உதயநிதி.. வியப்பில் சேப்பாக்கம்!
சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக நேற்று தான் பதவியேற்றார் உயதநிதி ஸ்டாலின், பதவியேற்ற அன்றே நேராக தொகுதிக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ஒரு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். இன்று அந்த இடத்தில் தானே மேற்பார்வை செய்து குப்பைகளை அகற்ற வைத்தார்.
Recommended Video
கொரோனா முழு ஊரடங்கு தொடங்கியதில் இருந்த, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்த தொகுதியின் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
நேற்று புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த ஏழை - எளிய மக்களுக்கு அரிசி-பருப்பு-மளிகை சாமான் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களையும், இரவு உணவையும் வழங்கினார்.
உணவு வழங்கினார்
இதேபோல் திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை, லாயிட்ஸ் கார்னர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி-பருப்பு-மளிகை சாமான்கள் போன்ற நிவாரணப் பொருட்களையும் இரவு உணவையும் வழங்கினார்.
அரிசி பருப்பு வழங்கினார்
அத்துடன் திருவல்லிக்கேணி, அயோத்திக்குப்பம் நீலம் பாஷா தர்கா பகுதி ஏழை-எளிய மக்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக அரிசி-பருப்பு-மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களையும்-இரவு உணவையும் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
குப்பை அதிகம்
புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு மக்களுக்கு நேற்று கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கிய போது, அங்குள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பையாலும்-துர்நாற்றத்தாலும் வாழ முடியாத சூழல் உள்ளதாக ஒரு பெண்மனி, உதயநிதி ஸ்டாலினிடம் கூறியுள்ளார்.
அதிகாரிகளை அழைத்தார்
அந்த பெண்மணி சொன்னபடி அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தை நேரில் பார்த்த உதயநிதி ஸ்டாலின், உடனே ஆக்ஷனில் இறங்கினார். இதையடுத்து நேற்றே சென்னை மாநகராட்சியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனே குப்பையை அகற்றுமாறு வலியுறுத்தினார்.
நேரடியாக வந்து பார்வை
அதன்பேரில், குப்பை அள்ளும் பணி இன்று தொடங்கி நடைபெற்றது. குப்பை அகற்றும் பணியை நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொரோனா கொடூரமாக பரவி வரும் இந்த சூழலில், அதிகாரிகளே வருவதற்கு தயங்கும் பகுதிகளுக்குள் அசால்டாக சென்று அனைத்து உதவிகளையும் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், சொன்னபடி குப்பையை அகற்றுகிறார்களா என்று நேரில் வந்ததை பார்த்து அந்த பகுதிகள் மக்கள் வியப்படைந்தனர்.
சூப்பர் எம்எல்ஏ
சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலினின் இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். ஒருவர் தனது பதிவில், இவ்வளவுதான் மக்களாகிய நாங்கள் ஓட்டுகளை இட்டுக்கொண்டு நாங்கள் எதிர்பார்ப்பது. நாங்கள் இருக்கும் இருப்பிடமும் எங்களுக்காக நாங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர் எங்களின் நிலைமையை புரிந்து அதற்கான சேவை மட்டும் செய்தால் போதும் என்று கூறியுள்ளார். சென்னை திமுகவின் கோட்டையாக இருப்பதற்கு ஏழை அடித்தட்டு மக்கள் தான் காரணம். அவர்கள் தான் திமுகவின் பலம். அதை சரியாக புரிந்து வைத்துள்ள உதயநிதி, தனது தொகுதியில் அவர்களுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வேண்டிய உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது.