ஹலோ ஓவர்.. ஓவர்.. துரைமுருகன் பட்ட சிரமம்! சேட்டிலைட் போன் வாங்கிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு செயற்கைகோள் அலைபேசிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்த அலைபேசிகள் வாயிலாக செயற்கைக்கோள் கோபுர சேவை இணைப்பு ஏதும் இல்லாமலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் சேவை பெற இயலும்.
அதன் விவரம் வருமாறு;

முல்லை பெரியாறு
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாறு அணை அடர்ந்த பெரியாறு வன புலிகள் சரணலாயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லை. மேலும், வெள்ளகாலங்களிலும், பருவமழை காலங்களிலும் மழை மேகங்களின் இடர்பாடுகளினால் அலைபேசி தொடர்பும் சரியாக கிடைக்கப்பெறாமல், தொடர்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற விபரங்களை தகவல் பரிமாற்றம் செய்ய சிரமம் ஏற்படுகிறது.

படகில் 14 கி.மீ தூரம்
மேலும், முல்லை பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கி.மீ தூரம் பயணம் செய்யும் போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு நோக்கில் தகவல் தொடர்பு சேவை மிகவும் இன்றியமையாதது ஆகும்.

செயற்கைகோள் அலைபேசி
அதனைத் தொடர்ந்து, 6 எண்ணிக்கையிலான செயற்கைகோள் அலைபேசிகள் மற்றும் ஒரு வருட சேவைக் கட்டணம் ஆகியவற்றிற்காக
ரூ.9.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை முதல்வர் இன்று வழங்கினார்.

அடர்ந்த காடு
இந்த அலைபேசிகள் வாயிலாக செயற்கைக்கோள் கோபுர சேவை இணைப்பு ஏதும் இல்லாமலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் சேவை பெற இயலும். இதன்மூலம், பெரியாறு அணை மற்றும் பெரியாறு அணைக்குரிய படகு பயணிக்கும் பாதையில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் எந்த நேரமும், எல்லா கால சூழ்நிலையிலும் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க இயலும்.












Click it and Unblock the Notifications