“நிறுத்திருங்க.. இனி பேசிக்கிட்ருக்க மாட்டேன்” முதல்வரிடம் புகார்.. கவுன்சிலர்களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த ஆய்வை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தி.மு.க கவுன்சிலர்கள், கட்டட உரிமையாளர்களிடம் வசூலில் ஈடுபடும் புகார்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதால் அவர் சூடாகியுள்ளார்.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் கவுன்சிலர்கள் மீது புகார் வந்தால் பதவி பறிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இஷ்டத்திற்கு கட்டடங்கள்
சென்னை புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. காலி மனைகளில் புதிய கட்டுமானங்கள் ஒருபக்கம், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக அடுக்குமாடி கட்டடங்கள் மறுபக்கம் என கட்டப்பட்டு வருகின்றன.
10 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் இருக்கும் கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏவிடம் அனுமதி பெறுவது அவசியம். ஆனால், பெரும்பாலும் அனுமதிக்கு விண்ணப்பித்த உடனே, கட்டுமான பணிகளை தொடங்கி விடுகின்றனர்.

பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்
சில கட்டுமான நிறுவனங்கள், அனுமதி பெற்றபடி கட்டடம் கட்டாமல், விதிகளை மீறி கட்டுவதாகவும், உரிய கழிவு நீர் வசதிகளை அமைப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. கட்டுமான பணிகள் முடிந்த பின், விதிமீறல் இருப்பது தெரியவந்தால், அதை இடிக்க கட்டுமான நிறுவனங்கள் மறுத்து நீதிமன்றங்களில் வழக்கு தொடருகின்றன.
வழக்கு முடியும்வரை, விதிமீறிலில் ஈடுபடும் கட்டுமான நிறுவனங்கள் மீது, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால், கட்டுமான நிறுவனங்களை நம்பி, பணம் செலுத்திய பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில், விதிமீறல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்க, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வரும், கட்டுமானத் திட்டங்களில் விதிமீறில்கள் உள்ளதா என்பதை கண்டறிய, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, 400 கட்டுமான திட்டங்களுக்கான பணிகள் நடைபெறும் இடங்களில், திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி கவுன்சிலர்கள்
கட்டட உரிமையாளர்கள், குறிப்பிட்ட சில மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்டுவதால் அவர்கள் விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது ஏரியாக்களில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து தகவல்களைத் திரட்டி, கட்டட உரிமையாளர்களிடம் பண வசூல் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுன்சிலரின் கணவர் லஞ்சம்
கடந்த மாதம், சென்னை மாநகர பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் கட்டுமான பணிக்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் எழுந்தது. இதையடுத்து, கட்சியிலிருந்தும், மாநகராட்சியில் இருந்தும் தி.மு.க கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேயர் பிரியாவும் மாநகராட்சிக் கூட்டத்தில் இதுதொடர்பாக பேசியிருந்தார்.

ஆட்சி மீது கோபமாக மாறும்
இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின், கட்சியினரை கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தி.மு.க மீது ஏற்கனவே அடாவடி புகார்கள் மக்கள் மத்தியில் பொதுவாக இருக்கின்றன. அதைக் களைய வேண்டும் என்றுதான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை சிக்கலை ஏற்படுத்தி ஆட்சிக்கு அவப்பெயர் வாங்கித் தந்து விடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை
மக்களிடம் அடாவடியாக பண வசூலில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும், கவுன்சிலர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கவுன்சிலர் மீது தொடர்ந்து புகார் வந்தால் பதவியைப் பறிக்கவும் தயங்கமாட்டோம் என மாநகராட்சியிலிருந்து கவுன்சிலர்களுக்கு கறாராக சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications