Newsmakers 2018: "ஹீ டூ".. ஒற்றை புகாரால் தமிழகத்தை அதிர வைத்த சின்மயி!
2018-ல் சின்மயி அளித்த மீடூ புகார் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.
சென்னை: 2018-ல் ஒரு கலக்கு கலக்கியவர் பின்னணி பாடகி சின்மயியும் ஒருவர்!
15 வருடங்கள் கழித்து திடீரென சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கொண்டு வந்ததும் தமிழகமே அதிர்ந்து போனது.
முதலில் இவருக்கு என்ன ஆயிற்று என்று நினைக்க தோன்றியது, பிறகு வைரமுத்து மீதுதவறு இருக்குமோ என்றும் நினைக்க தோன்றியது. எனினும் சின்மயியும், வைரமுத்துவும் மாறி மாறி செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை சொன்னார்கள்.
தன் மீது சின்மயி அளித்த புகார் மீடூ புகார் குறித்து வைரமுத்து வீடியோ வெளியிட்டு பதில் சொன்னாலும், தன் மீது வழக்கு தொடுத்தால் அதை நீதிமன்றம் மூலம் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.
பழிவாங்குகிறார்?
இந்த விஷயம் 2 விதமாக பார்க்கப்பட்டது. ஒன்று, திமுக என்ற கட்சியின் பலமான பின்னணியில் இருந்து கொண்டு வைரமுத்து இவ்வாறு சின்மயியிடம் தவறாக நடக்க முயன்றிருப்பாரோ என்ற பேச்சு எழுந்தது. அடுத்ததாக, ஆண்டாள் விவகாரத்தில், சின்மயியை பாசிசவாதிகள் தங்கள் சுயநலனுக்காக வைரமுத்துவை பழிவாங்குவதாகவும் பார்க்கப்பட்டது.
ஆதாரம் எங்கே?
எனினும் ஒரு குற்றச்சாட்டு வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை ஆதாரம்தானே முக்கியம். அதைத்தான் செய்தியாளர்கள் சின்மயியிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். 15 வருடத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள்.
சின்மயி கல்யாணம்
அடுத்ததாக, உங்களுக்கென்று சினிமாவில் ஒரு சங்கம் இருக்கும்போது, அங்கு போய் உங்கள் பாலியல் தொல்லைகளை சொல்லாமல் ஏன் மீடூவில் பதிவிட்டு வருகிறீர்கள் என்று கேட்டார்கள்? மூன்றாவதாக, பாலியல் தொல்லை கொடுத்தவரை எதற்காக உங்கள் கல்யாணத்துக்கு அழைத்தீர்கள், எதற்காக அவரிடம் ஆசி வாங்கினீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
நிரூபிக்கவில்லை
வைரமுத்து உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று வினவினார்கள்? இத்தனை கேள்விகளுக்கும் இதுவரை சின்மயி ஏற்றுக் கொள்ளும்படியான காரணத்தை சொல்லவில்லை. "15 வருஷத்தில் 10 வீடு மாற்றிவிட்டேன், அதனால் வைரமுத்து மீதான ஆதாரத்தைதான் தேடிக் கொண்டிருக்கிறேன், வந்ததும் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு போனவர்தான், இதுவரை அவர் வரவே இல்லை.
சேற்றை வாரி பூசினார்
சேற்றை வாரி பூசியதோடு சென்ற சின்மயி, இப்போது வரை வைரமுத்து மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வைரமுத்துவுக்காக திரையுலகில் நிறைய பேர் குரல் கொடுக்கவே செய்தார்கள். இன்றுவரை பலர் அவருக்கு ஆதரவாகவே நின்று வருகிறார்கள். ஆனால் சின்மயி, வைரமுத்து, ராதாரவி என அடுத்தடுத்த ஆட்களின் மீது குற்றச்சாட்டை வைத்து, டப்பிங் யூனியிலிருந்து நீக்கப்பட்டார். பட வாய்ப்புகளும் நழுவி சென்றன.
பாலியல் தொல்லை
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யாராக இருந்தாலும் தைரியமாக, துணிச்சலாக வந்து பெயர் சொல்லி பகிரங்கப்படுத்திய சின்மயிக்கு ஒரு சாராரின் ஆதரவு எப்போதும் இருந்தே வருகிறது. எனினும் அந்த ஆதாரத்தை கொண்டு வரும் வரை இந்த விவகாரம் முற்றுப்பெறா விட்டாலும், 2018-ல் சின்மயி வைரமுத்து மீது கிளப்பிய மீடூ புகார் பரபரப்பாக பேசப்பட்டது.