கூட்டமாய், கொண்டாட்டங்களில் இறங்கி சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட சுய ஊரடங்கு!
சென்னை: கொரோனா என்கிற மிகப் பெரிய தொற்று நோயில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்காக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சுய ஊரடங்கை கடைபிடித்தனர். ஆனால் மாலை 5 மணிக்கு தேசத்தின் பல பகுதிகளில் அந்த சுய ஊரடங்கின் அவசியம் தவறான புரிதலால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போனது என்பதுதான் வேதனை.
Recommended Video
தற்போதைய நூற்றாண்டின் மிகப் பெரிய தொற்று நோயாக உலகை ஆட்டுவித்து வருகிறது கொரோனா. இதுவரை 14,000 மனித உயிர்களைக் குடித்திருக்கும் கொரோனா இன்னமும் அதி தீவிரமாக பரவி வருகிறது.
|
ஒருநாள் சுய ஊரடங்கு
உலகின் ஒவ்வொரு நாடும் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பகீரத முயற்சிகளை படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவின் கொட்டம் அடங்கியபாடில்லை. இதனால்தான் பிரதமர் மோடி, இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதனை ஏற்று ஒட்டுமொத்த தேசமும் காலை 7 மணி முதல் சுய ஊரடங்கில் தம்மை இணைத்துக் கொண்டது.
|
வீட்டுக்குள் முடங்கிய தேசம்
எப்போதும் வாகனங்கள் அலைபாயும் நெடுஞ்சாலைகள் காக்கை குருவிகளின் ஒருநாள் உல்லாச விடுதிகளாக உருமாறிப் போயின.. காதுகளை கிழித்துக் கொண்டு இரைந்து கொண்டிருந்த ரயில்களும் விமானங்களும் தங்களுக்கும் சுய ஓய்வை கொடுத்து ஊரடங்கில் இணைந்து கொண்டன. தேசத்தின் அத்தனை திசைகளுமே ஊரடங்கில் ஒன்றிப் போய் கிடந்தன. ஒட்டுமொத்த நாடும் பல மணிநேரம் மயான அமைதியாக தம்மை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டது.
மாடிகளில் கரவொலி
இதனையடுத்து பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைப் போல மாலை 5 மணிக்கு, கொரோனா தடுப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தியாகசீலர்களுக்கு நன்றியும் உற்சாகமும் தெரிவிக்க அவரவர் வீடுகளில் நின்று, மாடிகளில் நின்று கரவொலி எழுப்பும் நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆம் கரவொலிகள் வந்தன.. மாடிகளில் நின்று கைதட்டினார்கள்... பால் கனிகளில் நின்று பரவசத்துடன் கை தட்டினர்.. இதுவரை ஓ.கே.
பெருநகரங்களின் பேரவலம்
ஆனால், பல இடங்களில் குறிப்பாக வட இந்தியாவில் 5 மணிக்கு பெரும் கூட்டமாக தெருக்களில் கூடி இந்த நிகழ்வை ஒரு திருவிழா கூட்டமாக மாற்றிவிட்டனர். மக்களே ஒன்று கூடாதீர்! தொற்று நோய் பரவும்... ஆகையால் ஊரடங்காக உள்ளே இருங்கள் என்றுதான் பிரதமர் அழைத்தார்.. ஆனால் பிரதமருக்கு ஆதரவு தருகிறோம் என்கிற பெயரில் அவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் பெருநகரங்களில்தான் கூட்டமாக கூடிவிட்டனர். ஆனால் பெரும்பாலான சிறு நகரங்கள், குக்கிராமங்கள் எப்போதும் போல் அரசு அறிவித்த சுய ஊரடங்குக்கு கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக அமைதி காத்தார்கள்.