வி.பி.சிங் பிறந்த நாள்- ஒடுக்கப்பட்டோரின் நன்றிகடனாக ஒருசேர நினைவுகூரும் ஸ்டாலின், திருமா, அன்புமணி!
சென்னை: சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிறந்த நாளை அவர் பிறந்திடாத தமிழ்நாட்டு மண் பெரும் நன்றியுடன் இன்று ஒருசேர நினைவுகூருகிறது..இதற்கு காரணம் மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளியேற்றியவர் என்பதுதான்!
மன்னர் பரம்பரையில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் அசைக்க முடியாத தூணாக உருவெடுத்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் வி.பி.சிங். ராஜீவ் காந்திக்கு எதிராக கலகம் எழுப்பி காங்கிரஸை தூக்கி எறிந்துவிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஜனநாயக சக்திகளோடு கை கோர்த்து மகத்தான ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியவர். அன்று மாநிலங்களின் மாபெரும் தலைவர்களாக திகழ்ந்த கருணாநிதி, என்.டி.ராமாராவ் என அத்தனை சக்திகளையும் ஒன்று திரண்டி இந்திய அரசியலின் தலை எழுத்தை தலைகீழாக்கிய மகத்தான மாமனிதர் வி.பி.சிங்.
மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மண்டல் குழு பரிந்துரைகளை தடைகளை உடைத்து நிறைவேற்றி காட்டியவர். இதற்காக தமது ஆட்சி அதிகாரத்தையே பறிகொடுத்தவர்... அதனால்தான் சமூக நீதிக் காவலர் என தமிழகம் காலந்தோறும் வி.பி.சிங்கை போற்றுகிறது.
கருணாநிதி அன்று புகழஞ்சலி
2008-ம் ஆண்டு வி.பி.சிங். மறைந்த போது முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழகத்தை பொருத்தவரை, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. காவிரி நடுவர் மன்றம் அமைத்திட அவர் உறுதுணையாக இருந்ததும்; எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையே பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட முன்வந்ததும்; மாநிலங்களிடையே மன்றம் அமைத்ததும்; சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமானதளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து அதனை விழா மேடையிலேயே வி.பி. சிங் ஏற்று அறிவித்ததும் என்றைக்கும் மறக்க முடியாதவைகளாகும் என புகழஞ்சி செலுத்தியது வெறும் வார்த்தைகள் அல்ல.. அத்தனையும் சரித்திரம்.
முதல்வர் ஸ்டாலின்
இன்றைக்கு மக்களின் நாயகன் சமூக நீதி சரித்திரம் வி.பி.சிங். பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் நினைவுகூர்ந்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #VPSingh பிறந்தநாளான இன்று #SocialJustice எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நன்றிப் பெருக்குடன்..
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், சமூகநீதிக் காவலர் மேனாள் இந்திய தலைமை அமைச்சர் .பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிப் பெருக்குடன் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.மண்டல் பரிந்துரையை நடைமுறைப் படுத்துவதற்காகவே தனது ஆட்சியதிகாரத்தை, ஃபாசிச பாஜகவினரின் இந்து விரோதப் போக்கால் பறிகொடுத்தவர் என கூறியுள்ளார்.
சமூக நீதி காப்போம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், "ஆட்சி என்ற காலை உடைத்துக் கொண்டாலும் சமூக நீதி என்ற கோலை அடித்து விட்டேன்"என்று முழங்கிய #சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர் காட்டிய வழியில் சமூகநீதியைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம். சமூகநீதியைக் காப்பதே நமது முதல் பணியாக இருக்கட்டும் என பதிவிட்டிருக்கிறார்.