போலி பத்திரப்பதிவு ரத்து..முதல்வர் ஸ்டாலின் அதிரடி..நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி சொத்துக்கள் மீட்பு
சென்னை: தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், பதிவு ரத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிய சட்டம் மூலம் நடிகை வாணிஸ்ரீயின் 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பதிவாளரே போலிபதிவுகள் குறித்து ஆய்வு செய்துஅவற்றை ரத்து செய்ய முடியும்.
இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்துஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்தநிலையில், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்
பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பிறகு, இந்த சட்டத்துக்கு சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டப்படி, பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம்.

அதிகாரம் யாருக்கு?
பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப் பட்ட தேதியில் இருந்து 30 நாட் களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மோசடி, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் அமலான நிலையில் பதிவு ரத்தை தொடங்கி வைத்துள்ளார். போலி பத்திரப்பதிவு பற்றி பதிவுத்துறை அலுவலகத்துக்கு வந்த சுமார் 12,000 புகார் மனுக்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நடிகை வாணிஸ்ரீயின் சொத்துக்கள் மீட்பு
நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தை வாணிஸ்ரீயிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் வசந்த மாளிகை படத்தில் ஜோடியாக நடித்தவர். நிறைய தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ளார்.

முதல்வருக்கு வாணிஸ்ரீ நன்றி
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆனூர் கிராமத்தில் உள்ள பழமையான பங்களாவில் வாணிஸ்ரீ வசித்து வருகிறார். இவருக்கு சென்னை உள்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இதில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து சிலர் விற்பனை செய்துள்ளனர். அந்த சொத்துக்கள் புதிய சட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. தனது சொத்துக்கள் திரும்ப மீட்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை வாணிஸ்ரீ நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications