எனது மகள் செந்தாமரை 7 வயதிலேயே நாட்டியம் கற்க ஆரம்பித்தார்! இசை விழாவில் மனம் திறந்து பேசிய ஸ்டாலின்
சென்னை: தனது மகள் செந்தாமரை 7 வயதிலேயே பரத நாட்டியம் கற்க ஆரம்பித்து விட்டதாகவும் சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் 9 வயதில் நடனம் ஆடியிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 43-வது வழுவூரார் நாட்டியம் மற்றும் இசை விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அந்த இசை விழாவில் முதல்வர் மனம் திறந்து பேசியதாவது;
முதல்வர் கையில் இருந்த அக்குபிரஷர் ரோலர்.. இத்தனை பயன்களா? விளக்குகிறார் டாக்டர் தீபா
மகள் செந்தாமரை
வழுவூரார் குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் நானும் நன்றி சொல்லக்கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இங்கே குறிப்பிட்டதைப் போல என்னுடைய மகள் செந்தாமரை - நாட்டிய கலா சாம்ராட் கலைமாமணி வழுவூர் சாம்ராஜ் அவர்களிடம் நாட்டியம் கற்றவர் என்பதை இங்கே சொன்னார்கள், அதிலே எனக்கு உள்ளபடியே பெருமை.
7 வயதில் பரதநாட்டியம்
ஏழுவயதில் இருந்தே செந்தாமரை நாட்டியம் கற்று வந்தார். தன்னுடைய ஒன்பதாவது வயதில் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலியில் நடனம் ஆடியிருக்கிறார். 14.8.1996-ஆம் நாள் மியூசிக் அகாடமி ஹாலில் செந்தாமரையினுடைய நாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றிருக்கிறது. மறைந்த தலைவர் அய்யா மூப்பனார் அவர்கள் தலைமையில், இசைஞானி இளையராஜா அவர்களுடைய முன்னிலையில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றக்கூடிய அந்த விழா நடந்ததை நான் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன்.
இயல் -இசை -நாடகம்
அன்றைய நாள் சிறப்பாக செந்தாமரை அவர்கள் நாட்டியம் ஆடினார் என்று சொன்னால், அவரை மிகச் சிறப்பாக பயிற்றுவித்தவர் தான் ஆசிரியர் சாம்ராஜ் அவர்கள் என்பதுதான் உண்மை. நாட்டியக் கலையை வளர்க்க வேண்டும். இதனை அரசோ, இதுபோன்ற அமைப்புகளோ மட்டுமல்ல, தனிமனிதர்களும் செய்தாக வேண்டும். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழும் - தமிழ்நாடும்
கலைகள் என்பவை தமிழ்ப் பண்பாட்டைக் காலம் காலமாக வளர்த்தெடுக்கும் பணியைச் செய்து வருகின்றன. தமிழும் - தமிழ்நாடும் பல்லாயிரம் ஆண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியங்கள் தான் அடிப்படையான காரணம். எத்தனையோ படையெடுப்புகளை தமிழ்நாடு சந்தித்துள்ளது. அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நின்று செழிக்க நமது கலை, இலக்கியங்கள்தான் காரணம்.