பேராசிரியர் அன்பழகன் வரலாறை எவராலும் அழிக்க முடியாது! உணர்வால் வழிநடத்துகிறார்! ஸ்டாலின் நெகிழ்ச்சி!
சென்னை: பேராசிரியர் அன்பழகன் வரலாறை எவராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இப்போதும் தன்னை உணர்வால் பேராசிரியர் அன்பழகன் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் 101வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு விவரம் வருமாறு;
கம்ப்யூட்டர் சயின்ஸை அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்த பேராசிரியர் அன்பழகன்! மறக்க முடியாத திட்டங்கள்!
9 முறை எம்.எல்.ஏ.
ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், நிதியமைச்சர், 1977-ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் கழகத்தின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர்.
உணர்வால் வழி நடத்துகிறார்
சுயமரியாதை இயக்க காலந்தொட்டு - இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரையில் தனது உரையால் வழிநடத்திக் கொண்டு இருந்த பேராசிரியப் பெருந்தகை அவர்கள் இப்போதும் உணர்வால் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டே தனது பணி என்று சொன்னவர் பேராசிரியர்.
சமூக நீதி
சமூக நீதியும் - வகுப்புரிமையும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பட்டுப் போய்விட அனுமதிக்கக் கூடாது என்பதைப் பேராசிரியர் மேடைதோறும் வலியுறுத்திக் கொண்டு இருந்தார். சமூகநீதிக் கருத்தியல், வகுப்புரிமை இன்று இந்தியா முழுமைக்கும் ஒலிக்கும் சொல்லாக - யார் நினைத்தாலும் அதில் கை வைக்க முடியாத கருத்தியலாக இருக்கிறது.
மாநில சுயாட்சி
மாநில சுயாட்சி - மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர். இன்று இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக் குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகளே மாநில சுயாட்சிக் கொள்கைகளைப் பேசத் தொடங்கி இருக்கும் காட்சியை இப்போது பார்க்கிறோம்.
உறங்கப்போகும் முன்
''ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!" என்று வேண்டுகோள் வைத்தார் பேராசிரியர் அவர்கள். இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.