களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. கோவை கார் வெடிப்பு தொடர்பாக தலைமை செயலர், டிஜிபியுடன் மீட்டிங்
சென்னை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாவு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை உக்கடம் அருகே ஈஸ்வரன் கோவில் முன்பாக நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கோவை வந்து விசாரணை நடத்தினார். சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவம் கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்ததாலும், அடுத்த நாள் தீபாவளி பண்டிகை என்பதாலும் இது சதி செயலாக இருக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் கூடும் இடத்தில் காரை வெடிக்க திட்டமிருந்த நிலையில் காவல்துறையினர் காரை நிறுத்தியதால் கோவில் அருகில் வெடிக்கச் செய்திருக்கிறார் முபின். காரில் இருந்த சிலிண்டரை வெடிபொருட்கள் மூலம் வெடிக்கச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத தொடர்பு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேசா முபின், கடந்த 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். இலங்கை தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோவை அசாருதீனுடன் மிக நெருக்கமாக இருந்தவர் முபின். கேரளா சிறையில் உள்ள அசாருதீனை முபின் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

5 பேர் கைது
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டர். கோவையில் 1998ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் சகோதரர் நவாஸின் மகன்தான் முகமது தல்கா. இவர்கள் அனைவரும் மீதும் ஊபா எனப்படும் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

போலீஸ் விசாரணை
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர்.

ஊபா வழக்கு
பொதுவாக ஊபா வழக்குகளை தேசிய புலனாய்வு முகமைதான் விசாரிக்கும். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகார வரம்புக்குள், ஊபா வழக்குகளை விசாரிக்க முடியும். இதனால் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ இன்று தொடங்கியுள்ளது.

டிஜிபி ஆலோசனை
இதனிடையே தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துடன் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் நேரடியாக சென்று பார்வையிட்ட இடங்கள் குறித்தும்,கார் சிலிண்டர் வெடித்தது பற்றியும் விளக்கம் அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயரதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications