தமிழகத்தில் குளிர் அலை..பரவிய செய்தி வதந்தி..சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னையில் வழக்கமாக நிலவும் குளிரை விட அதிகமாக குளிர் காணப்பட்டது என புரளி கிளம்பியது. தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவுகிறது. வானிலை ஆய்வு மையம் சார்பில் அத்தகைய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. அதில் குளிர் அலை பரவும் என்றும் நோய்கள் பரவும் என்றும் கூறப்பட்டது.

பருவநிலை மாற்றம்
‘‘தற்போது சூரியனிடமிருந்து பூமி வெகு தூரம் நகர்ந்து செல்கிறது. அதனால் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு தமிழகத்தில் நிலவிய வெப்பநிலையை விட குளிர்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை மக்கள் அனுபவிப்பார்கள். அதனால் நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் உண்டாகும். அதனால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் தகவல் பரவியது.

சென்னை வானிலை மையம் விளக்கம்
இதனையடுத்து பலரும் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து வானிலை ஆய்வு மையம் அதன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நகர்வு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. சென்னை ஐ.எம்.டி.யால் அப்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.

சென்னையில் குளிரா?
சமூகவலைத் தளங்களில் திடீரென பொய்யான செய்தி பரவுவது வழக்கமான நிலையில் நேற்று பரவிய இந்த செய்தியால் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சென்னையில் வழக்கமாக நிலவும் குளிரை விட அதிகமாக குளிர் காணப்பட்டது எனவும் புரளி கிளம்பியது.

தவறான தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் கே.பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவுகிறது. வானிலை ஆய்வு மையம் சார்பில் அத்தகைய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications