பட்டாக்கத்தி..பாட்டில் வீச்சு..பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் மோதல்..பதறிய மெரீனா..4 பேர் கைது
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டதில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
சென்னை: மெரினா கடற்கரையில் மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். மாணவர்கள் சண்டை தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.
மாநில கல்லூரியில் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வந்துள்ளது. அது தொடர்பாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்டுள்ளனர்.
பட்டப்பகலில் கத்தி மற்றும் பாட்டில்களை வைத்து இருதரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மெரினா காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தப்பியோடி தலைமறைவாக இருந்த மாணவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.