ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. 6 பேரை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்.. திருநாவுக்கரசர் சொன்ன கருத்து!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும்.

6 பேரும் விடுதலை
சிறையில் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை பெற இருக்கிறார்கள்.

திருநாவுக்கரசர் கருத்து
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ராஜீவ் காந்தி கொலை எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள், அவர்களின் விடுதலையால் குடும்பத்தினர், அரசியல் கட்சிகள், உடனிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஏற்கவோ, மறுக்கவோ ஏதும் இல்லை
அதே நேரத்தில் 6 பேரின் விடுதலையால் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்ல முடியாது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்றாலும், சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும். நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதில் ஏற்றுக்கொள்வதற்கோ, மறுப்பதற்கோ எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications