நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வார்டு பங்கீடு..திமுகவுடன் காங்கிரஸ் பேச்சு.. அதிக இடங்கள் கிடைக்குமா
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு பங்கீடுகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இந்த முறை கூடுதலாக இடங்களை கேட்டு பெற வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக் குழு
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடர் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளான துணைத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய பொதுச் செயலாளர்கள், தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சு
இக்குழுவினர்கள் அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்களோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் அவரவர்கள் இருக்கும் மாவட்டங்களில் தேர்தல் பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவார்கள்.
சுறுசுறுப்பு
மேலும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தலைமையில் இக்குழு செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது காங்கிரஸ். சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் எதிர்பார்த்த தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை.
அதிக இடங்கள் கிடைக்குமா
''திமுக மதிக்க கூட மாட்டேங்குது'' என்று தேர்தலுக்கு முன்பாக கே.எஸ்.அழகிரி சோகமாக கூறி இருந்தார். இந்த முறை விட்டதை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ''திமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பெறுவோம்'' என்று கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார். காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.