கொரோனா லாக்டவுன் : தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்
முழு ஊரடங்கை யொட்டி சென்னையிலிருந்து இரண்டு நாளில் 4 ஆயிரத்து 575 அரசு பேருந்துகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 575 பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர்.
சென்னை: கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகர் சென்னையில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தலைநகர் சென்னையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனையடுத்து சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்தனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கார்கள், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தனர். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.
கொரோனா உதவித் தொகை- முதல் கட்டமாக ரூ2,000 வழங்கும் திட்டம்-தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முழு லாக்டவுன் காலத்தில் தனியார் அலுவலகங்கள் இயங்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட 4,575 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 875 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டதால் தலைநகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.