கொரோனா தடுப்பூசி: நவம்பரில் மிகப்பெரிய சாதனை படைக்க போகும் தமிழகம்.. அமைச்சர் மா.சு பெருமிதம்!
சென்னை: இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்ட கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கொரோனாவை தடுக்கும் மிக முக்கிய பேராயுதம் தடுப்பூசியாகும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று 7-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அடையாறு கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த மாதத்தில் 43 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கியது.

50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது
நேற்று இரவு வரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் 13 லட்சம் பேர் உள்ள நிலையில், 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. முதல்வர் ஆலோசனையின்படி, மத்திய அரசிடம் துறை செயலாளருடன் நான் நேரடியாக சென்று 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.

மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
இதனால் மத்திய அரசின் சார்பில் 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் 1.22 கோடி ஒதுக்கீடு செய்தது அந்த தடுப்பூசிகளையும் தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தியதால் கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டது. இவ்வாறு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசிகளை முழுவதும் சிறப்பாக பயன்படுத்தி செயல்பட்ட காரணத்திற்காகவும், முதல்வரின் கோரிக்கையை ஏற்றும் நவம்பர் மாதத்தில் 1.40 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

100 சதவீதம் தடுப்பூசி
நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 50 சதவீதத்திற்கு மேல் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு அடையும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்.இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications