சென்னையில் மீண்டும் பரவும் கொரோனா..பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்.. மாநகராட்சி உத்தரவு
சென்னை: சென்னையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்றைய தினம் ஆண்கள் 248, பெண்கள் 199 என மொத்தம் 447 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 102 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 ,75,380 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35, 32,547 பேர் குணமடைந்துள்ளனர். 438 பேர் நேற்று குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 4,794 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
நோ யூஸ்.. கொரோனாவுக்கு எதிராக இந்த 2 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.. மொத்தமாக தூக்கிய "ஹு"
சென்னையில் 2 நாட்களாக அதிகம்
தமிழகத்தில் புதன்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு 419 ஆகவும், சென்னையில் 94 ஆகவும் இருந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்று சற்று அதிகமாகியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக கவசம் கட்டாயம்
சென்னையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
பரவும் காய்ச்சல்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் அதே சூழ்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றிக்காய்ச்சல்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் எழும்பூர் அரசு நல மருத்துவமனையில் 129 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 18 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதில் யாருக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக் கூடாது என எச்சரித்துள்ளார்.
மாஸ்க் அணிவதன் அவசியம்
தமிழகத்தில் இதுவரை 282 பேருக்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறியுள்ள அமைச்சர் சுப்பிரமணியன் குழந்தைகளுக்கு இருமல், தும்பல், சளி இருந்தால் உடனே மருத்துவமனையை அனுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகளை சுத்தம் செய்வது, முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றியதால் மற்ற காய்ச்சல் பரவாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனவே பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வதன் மூலமும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும் கொரோனாவில் இருந்து மட்டுமல்ல பன்றிக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பிற காய்ச்சல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.