டிவி விவாதங்கள்... பாஜக மீது மார்க்சிஸ்ட் கட்சி கனகராஜ் சரமாரி புகார்
சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் பிற கட்சியினர் பங்கேற்பது குறித்து பாஜகவினர் தலையிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் கனகராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனகராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாஜகவினர் யாரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்கிற அறிவிப்பு வெளிப்படையாக செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிற கட்சிகளின் சார்பில் விவாதத்தில் பங்கேற்கும் சிலரை குறிப்பிட்டு அவர்களை அழைக்க கூடாது ; அப்படி அவர்கள் அழைக்கப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதம் கிடைத்தால்தான் மீண்டும் பாஜகவினர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என்ற நிபந்தனையை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தோழர்கள் அருணன் மற்றும் கனகராஜ் திமுகவிலிருந்து பிரசன்னா, மதிமாறன் காங்கிரஸில் இருந்து ஜோதிமணி மற்றும் செல்வப்பெருந்தகை விசிக விலிருந்து ஆளூர் ஷாநவாஷ் என இந்தப் பட்டியல் பட்டியல் நீள்வதாக சொல்லப்படுகிறது. இது உண்மை எனில் மிகப்பெரிய அராஜகம் ஆகும்.
தற்போதும் பாஜகவினரை நிகழ்ச்சிக்கு அழைத்தால் குறிப்பிட்ட சிலர் விவாதத்தில் பங்கேற்கிறார்களா என கேட்டு அத்தகையோர் பங்கு எடுத்துக் கொண்டால் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தனித்தனியாக வலியுறுத்துகிறார்கள் என்பதே உண்மை.இதற்கு சில தொலைக்காட்சி நிர்வாகங்கள் அடிபணிந்த்தால் இப்போது மொத்தமாகவே ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .
தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த நிர்ப்பந்தத்திற்கு அடிபணிய போகின்றனவா என்று தெரியவில்லை. ஏற்கனவே இது போன்ற சில நிபந்தனைகளை குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் ஏற்றுக் கொண்டிருப்பதை அவர்களின் நடவடிக்கை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போது ஒட்டுமொத்தமாக ஒரு பட்டியல் கொடுத்து நிர்ப்பந்தித்தால் அதை உதாசீனப்படுத்தி நிராகரிக்க வேண்டிய பொறுப்பு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உண்டு. மாறாக இதை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றால் மற்ற கட்சிகள் அனைவரும் இணைந்து பாஜகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நாம் யாரும் பங்கேற்பது குறித்து பொருத்தமான உறுதியான கூடாது நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அவர்கள் ஆடுகளத்தில் எதிராளியே இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள் .நம்மைப் பொறுத்தமட்டில் சமமான வாய்ப்போடு விவாதிக்கலாம்; விவாதத்தின் தன்மைகளை சீர்தூக்கிப் பார்த்து பொதுமக்கள் முடிவு எடுத்துக் கொள்ளட்டும் என்பதுதான் நிலைபாடு. இதற்கு மாறாக யாருமே வரக்கூடாது ஏதாவது சில பேரை வைத்துக் கொண்டு இத்தகைய விவாதங்களை பெயரளவிற்கு நடத்துவது வருங்காலம் பத்திரிக்கை மற்றும் ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும். இதை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு கனகராஜ் பதிவிட்டுள்ளார்.