விஜயகாந்த் வந்தார்.. சிரித்தார்.. கும்பிட்டார்.. தடுமாறி பேசினார்.. குரல் கேட்டு தொண்டர்கள் உற்சாகம்
பிரச்சாரம் செய்ய வரும் விஜயகாந்த்துக்கு தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்
Recommended Video
சென்னை: இதோ வந்துட்டார்ல.. எங்க சிங்கம் வந்துட்டார்ல.. என்று தேமுதிக தொண்டர்கள் பெரும் சந்தோஷமடைந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வட சென்னைக்குட்பட்ட கொளத்தூர் பகுதியில் மட்டும் சில வார்த்தைகளை பேசினார்.
உடல் நிலை காரணமாக நீண்ட நாள் ஓய்வில் இருந்த விஜயகாந்த், இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக உள்ளிட்ட அதிமுக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
வெள்ளை சட்டை, வேட்டி, கூலிங் கிளாஸ், விபூதி என பிரச்சார வேனின் முன் சீட்டில் அமர்ந்து தனது வீட்டை விட்டுக் கிளம்பினார் விஜயகாந்த், அந்த வேனுக்கு முன்னும் பின்னும் ஏராளமானோர் டூ-வீலரில் பயணித்தனர். அந்த வண்டிகளில் தேமுதிக கொடி பறக்கிறது. இது போதாதென்று வேனிலேயே நிறைய பேர் தொங்கி கொண்டு வருகின்றனர்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக களம் குதித்த விஜயகாந்த்.. பெரும் உற்சாகத்தில் தேமுதிகவினர்!
மக்கள் வேடிக்கை
சாலையின் இரு பக்கமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வரவும் அவர்களை பார்த்து விஜயகாந்த் கையசைத்தவாறே சென்றார். பிரதான சாலையில் தேமுதிகவினர் திரண்டு வந்தனர்.
உற்சாகத்தில் தொண்டர்கள்
ரொம்ப நாளைக்கு பிறகு விஜயகாந்த்தை நேரில் பார்க்க உள்ளதாலும், அவரது குரலை கேட்க உள்ளதாலும் தேமுதிக தொண்டர்கள் பெரும் உற்சாகமாகி உள்ளனர். நாளையோடு பிரச்சாரம் முடியும் நிலையில் விஜயகாந்த்தின் இந்த கடைசி நேர பிரச்சாரம் ஒட்டுமொத்த தேமுதிக கூடாரத்துக்கே புத்துணர்ச்சியை தந்துள்ளது. ஆனால் விஜயகாந்த் எங்குமே பேசவில்லை. 2 இடத்தில் மட்டும் பேசினார்.
வில்லிவாக்கம்
முதலில் மத்திய சென்னை தொகுதிக்குள் விஜயகாந்த் வேன் நுழைய ஆரம்பித்ததுமே, தொண்டர்கள் சத்தமாக முழக்கமிட்டனர். குறிப்பாக வில்லிவாக்கத்தை அடைந்தவுடன் விஜயகாந்த் கூலிங் கிளாஸ் கழட்டிவிட்டார். பிரச்சார வேனில் பாமக வேட்பாளர் சாம் பால் ஏறி நின்றுகொண்டார். அவரது ஒரு கையில் தேமுதிக முரசு சின்னம் இருந்தது. மற்றொரு கையில் தங்களது கட்சி சின்னமான மாம்பழத்தை வைத்து கொண்டார். வேனுக்குள் விஜயகாந்த் இரு பக்கமும் கையை வேகமாக ஆட்டி, ஆசைக்க, மேலே பாமக வேட்பாளர் சாம்பால் அனைவருக்கும் சின்னங்களை காட்டியபடியே வந்தார்.
பேசவில்லை
பாமகவுக்கு தந்ததுபோலவே தங்களுக்கும் 7 + 1 சீட் வேண்டும் என்று தேமுதிக அடம்பிடித்து.. இழுபறி நடந்து.. கடைசியில் விஜயகாந்த் பாமக வேட்பாளருக்காக முதலில் பிரச்சாரம் செய்தது ஆச்சரியம்தான்! ஆனால் விஜயகாந்த் ஒன்றிரண்டு வார்த்தையாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறுமனே கையை அசைத்து சென்றது, தொகுதி மக்களுக்கு ரொம்பவே அப்செட்தான்!
வட சென்னையில் பேசினார்
மத்திய சென்னையை முடித்துக் கொண்டு வட சென்னை தொகுதிக்குள் பிரவேசித்தார் விஜயகாந்த். வட சென்னையில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் கையில் முரசு சின்ன தட்டியை எடுத்துக் காட்டியபடி சென்றார் விஜயகாந்த். மத்திய சென்னையில் பேசாத விஜயகாந்த், வட சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட, கொளத்தூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூரில் ஒரு இடத்தில் பேசினார்.
2 இடத்தில் பேசிய விஜயகாந்த்
பெரவள்ளூரில் பேசிய விஜயகாந்த்தின் பேச்சு ஓரளவுக்கே தெளிவாக இருந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய விஜயகாந்த் மூலக்கடை பகுதியிலும் ஒரு இடத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசினார். பழைய விஜயகாந்த்தாக அவரது குரல் இல்லை என்றாலும் கூட தொண்டர்களுக்கு அவரது குரலைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.