தமிழக ஆளுநரை திரும்ப பெற சொல்லும் திமுக! சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் சுமூக உறவு இல்லாத நிலையில், ஆளுநரை திரும்ப பெறுமாறு திமுக கூறி வரும் நிலையில் அதற்கு சட்டம் என்ன சொல்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் சுமூக உறவு இல்லை. மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழக அரசு பகிரங்கமாகவே ஆளுநர் மீது குற்றம் சுமத்தியது.
ஆளுநரும் பல்வேறு விவகாரங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
திண்டுக்கல்லை பிரித்து உருவாகிறதா பழனி புதிய மாவட்டம்? என்னவாகும் வேடசந்தூர்? பரபரக்கும் விவாதம்!
ஆளுநரை திரும்ப பெறக்கோரி
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உறவானது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் நிலையில், அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று நேரடியாகவே இப்போது திமுக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் திமுகவின் பொருளாளரும், மக்களவை திமுக எம்.பிக்கள் குழுவின் தலைவருமான டி.ஆர் பாலு, ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம் கடிதம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
சட்ட வழிமுறைகள் இருக்கின்றதா?
இதற்காக ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகள் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அரசியல் அமைப்பு பிரதிநிதியாக உள்ள ஆளுநரை திரும்பப்பெறுமாறு மாநில அரசால் கோர முடியுமா? அதற்கான சட்ட வழிமுறைகள் இருக்கின்றதா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழாமல் இல்லை. இது குறித்த விரிவான தகவல்கள் வருமாறு: -
நியமனம் செய்யவோ நீக்கவோ
அரசியல் சாசனத்தின் பிரிவு 155 மற்றும் 156 படி ஜனாதிபதியால் மாநில ஆளுநர் நியமனம் செய்யப்படுகின்றார். ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும், ஜனாதிபதி நினைத்தால் அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய முடியும். பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுக்களின் ஆலொசனைப்படி ஜனாதிபதி செயல்படுவதால், மத்திய அரசால் ஒரு மாநிலத்தின் ஆளுநரை நியமனம் செய்யவோ நீக்கவோ முடியும் நிலைதான் உள்ளது.
நிறுத்திவைக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது
அமைச்சரவை ஆலோசனையின் செயல்பட வேண்டிய அரசியல்சார்பு அற்ற தலைவராக ஆளுநர் கருதப்பட்டாலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது. சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஒப்புதல் அளிப்பதோடு, ஒரு கட்சியை பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பது, எந்தக் கட்சிக்கு முதலில் பெரும்பான்மையை காட்ட அழைப்பு விடுப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் ஆளுநர் வசமே உள்ளன.
தொங்கு சட்டமன்றம் ஏற்பட்ட போது
குறிப்பாக தொங்கு சட்டசபை ஏற்படும் பட்சத்தில் ஆளுநரின் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மையில், ஆளுநருக்கு உள்ள இந்த அதிகாரங்களை எடுத்துக்காட்டும் வகையில் அடுத்தடுத்து நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்ட போது தேவேந்திர பட்னாவிசை ஆட்சி அமைக்க முதலில் ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனாலும் 80 மணி நேரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்தது. அதேபால அண்மையில் பஞ்சாப் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க்க மறுத்து விட்டார்.
அதிகார வரம்புகளுக்கு உட்பட்டு
இந்த இரண்டு விவகாரங்களும் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களை நேரடியாக காட்டும் வகையில் இருந்தது. ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் பொதுவெளியில் இந்த விவகாரம் எப்படி கையாளப்பட வேண்டும் என்பதற்கு அரசியல் அமைப்பில் எந்த விதிகளும் இல்லை. இத்தகைய வேறுபாடுகள் இருவருடைய அதிகார வரம்புகளுக்கு உட்பட்டு காலம் காலமாக கையாளப்பட்டு வருகிறது.
நீதிமன்றம் சொல்வது என்ன?
ஜனாதிபதியின் விருபத்தின் பேரில் ஆளுநர் பதவியில் இருப்பதால் ஆளுநருக்கு அவரது பணிக்கால பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழாமல் இல்லை. அதேபோல், ஆளுநரை திரும்ப பெறுவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உள்ளதா? என்ற கேள்விகளும் எழுகின்றன. கடந்த 1981 ஆம் ஆண்டில் சூர்ய நரேன் சவுத்ரி, மத்திய அரசு இடையேயான வழக்கில், ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் ஆளுநரின் பதவி இருப்பது நியாயமானது இல்லை. ஆளுநரின் பதவிக்கு எந்த பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கூறியியிருந்தது.
ஜனாதிபதி நினைத்தால்..
அதேபோல், 2004 ஆம் ஆண்டு ஒரு வழக்கில், ஆளுநரை ஜனாதிபதி நினைத்தால் எப்போது வேண்டும் என்றாலும் பதவியில் இருந்து நீக்க முடியும் என்றும்.. அதற்கான காரணங்களை கூட கூற வேண்டிய அவசியம் இல்லை என கூறியது. எனினும் இந்த அதிகாரத்தை தன்னிச்சையாக நியாயமற்ற முறையில் பயன்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது நியமனம் செயப்பட்ட பல மாநில ஆளுநர்கள் பதவியில் இருந்து விலகினர்.
பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதால்
அப்போதும் ஆளுநர்கள் தானாகவே பதவி விலகியதாகவே மத்திய அரசு வலியுறுத்தி கூறியது. பல ஆண்டுகளாகவே மநில ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து சில ஆணையங்களும் குழுக்களும் சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளன. 1988 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷன், கவர்னரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதால் அதற்கு முன்பாக அவரை நீக்கக்கூடாது என்றும் சில அரிதான கட்டாயச்சூழலில் மட்டும் இதற்கு விதி விலக்கு உண்டும் எனவும் பரிந்துரைத்து இருந்தது.
பதவி நீக்கம் செய்ய முடியாது
அதேபோல், கவர்னரை பதவி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் விதிகள் வகுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. எனினும் இந்த பரிந்துரைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. இதன்படி பார்த்தால் ஒரு மாநில அரசு விரும்பினால் எந்த ஒரு ஆளுநரையும் பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்த விவகாரம் முழுக்க முழுக்க ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதேயாகும்.