பாஜகவையே "ஓவர் டேக்" செய்த திமுக.. "இந்துக்களுக்காக.." தேர்தல் அறிக்கையில் வரிசையாக வாக்குறுதிகள்
சென்னை: இந்துக்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு 25,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை.
திமுக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது கிடையாது என்பது பாஜக தலைவர்கள் பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
சமூக வலைதளங்கள் வாயிலாகவும், திமுக மீது பாஜக ஆதரவாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இதுதான்.
தனி அக்கறை
ஆனால் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. இந்துக்கள் மீது திமுகவுக்கு தனி அக்கறை இருப்பது போன்று பல்வேறு வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்துக்களை திமுகவிற்கு எதிராக அணிதிரள வைக்கும் பாஜகவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு தனி கவனம்
இதுவரை இல்லாத அளவுக்கு திமுக இந்துக்கள் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது இந்த தேர்தல் அறிக்கையை வைத்துப் பார்த்தால் உறுதியாகியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற சில இந்துக்கள் சார்ந்த அறிவிப்புகள் இதோ உங்களுக்காக..
முக்கியமான இந்து ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு ஒரு லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயை அரசு மானியம் வழங்கப்படும்.
பூசாரிகள் ஊதியம் உயர்வு
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். கிராமப்புற கோவில் பூசாரிகளின் ஊதியம் உயர்த்தப்படும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்படும். ஏற்கனவே பயிற்சி பெற்ற 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக வேலை தரப்படும்.
ஆயிரம் கோடி
மலைக் கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய வசதியாக ரோப் கார் வசதி செய்து தரப்படும். இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜகவே யோசித்திருக்காது
இந்து ஆலயங்கள் புனரமைப்பு, ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கு உதவித்தொகை, என்பதெல்லாம், பாஜக நினைத்துப் பார்த்திராத தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இதன்மூலம் இந்துக்களை ஓரணியில் திரட்டும் பாஜக முயற்சிக்கு திமுக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கு பாஜக எந்த மாதிரி பதிலளிக்கப் போகிறது.. அதிமுக தேர்தல் அறிக்கை எந்த மாதிரி இருக்க போகிறது என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.