தங்கம் தென்னரசு அப்படி சொன்னதும் பின்னாடி இருந்து பூரித்தபடி அன்பில் மகேஷ்.. சட்டென செய்த செயல்
சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை விறுவிறுப்பாக வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூரிப்புடன் பார்த்தபடி செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் வர உள்ள நிலையில் 2024-25ம் ஆண்டிற்காக தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.

உதாரணமாக , குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்கம் தென்னரசு கூறினார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 2024-25ம் ஆண்டில் ₹13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ₹100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும் என்றும் கூறினார். இப்படி பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்களை பற்றி விரிவாக தங்கம் தென்னரசு வாசித்துக் கொண்டிருந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பற்றி கூறிய உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பூரித்து போய் பார்த்தபடி மேஜையை தட்டி உற்சாகம் அடைந்தார். இதேபோல் கலைஞரின் திட்டங்கள் பற்றி பேசும் போது கருணையும் நிதியும் ஒன்றாக சேரும் போதெல்லாம் தமிழர்கள் தலை நிமர்ந்தனர்.. என்று கூறிய போதும் அன்பில் மகேஷ் பூரித்து போய் பார்த்தார்












Click it and Unblock the Notifications