சொத்துத்தகராறில் வெட்டி சாய்க்கப்பட்ட டாக்டர் சுப்பையா - கொலை பின்னணியும் பரபரப்பு தீர்ப்பும்
நரம்பியல் மருத்துவர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சொத்துத்தகராறில் வெட்டி சாய்க்கப்பட்ட டாக்டர் சுப்பையா மரணவழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை கிடைத்துள்ளது.
சென்னை: பிரபல நரம்பியர் டாக்டர் சுப்பையா கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் கூலி படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் 9 பேரில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த கொலை வழக்கின் பின்னணி குறித்து வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் பார்க்கலாம்.
அரசு நரம்பியல் துறை மருத்துவராக 5,000 அறுவை சிகிச்சைகளுக்குமேல் செய்து புகழ்பெற்றவர் மருத்துவர் சுப்பையா. இவருடைய பூர்விகம் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு தான். இவரது தாய்மாமன் பெருமாளுக்கு காது, வாய் செயலிழந்து விட்டதோடு குழந்தையும் இல்லை. இந்த நிலையில்தான் அன்னப்பழம் என்பவரை இரண்டாம் தாரமாக அவர் திருமணம் செய்துகொண்டார்.
ஷாக்கடிக்கும் டீன் ஏஜ்.. 3 ஆண்டுகளில் 1.65 லட்சம் பேர் தற்கொலை.. 4வது இடத்தில் தமிழ்நாடு
திருமணமான சிறிது காலத்திலேயே பெருமாளை விட்டு ஓடி விட்டார் அன்னப்பழம், மூன்று வருடங்கள் கழித்து கையில் ஒரு குழந்தையுடன் திரும்பி வந்தார். தனக்கும் குழந்தைக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று பெருமாளிடம் சண்டை போட்டார் அன்னப்பழம். இதை ஏற்க மறுத்த பெருமாள் நாடார், தனது சொத்தையெல்லாம் தன்னுடைய சகோதரியும் சுப்பையாவின் அம்மாவுமான அன்னக்கிளியின் பெயரில் எழுதி வைத்து விட்டார்.
வழக்கு பிரச்சினை
சொத்துக்கள் குறித்து பெருமாளின் இரண்டாவது மனைவி அன்னப்பழம் தரப்பு வழக்கு தொடர்ந்தது அந்த வழக்கை அன்னக்கிளி தரப்பும் எதிர்கொண்டனது. பல ஆண்டுகளாக வழக்கு நடந்த நிலையில் அன்னபழத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவே, அந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்னக்கிளி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இந்த நிலையில், இரு தரப்பும் சமாதானம் செய்து கொண்டனர். இதில் அஞ்சுகிராமத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலம் சுப்பையாவின் தாய் அன்னக்கிளிக்குக் கிடைக்கிறது.
நிலத்தை எழுதிக்கொடுத்த மகன்
சில வருடங்கள் கழித்து அன்னபழத்தின் மகனான பொன்னுசாமி, தன் தாய் செய்துகொண்ட உடன்படிக்கை செல்லாது என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடியானது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, அன்னப்பழத்தின் மகன் பொன்னுச்சாமி அந்த நிலத்தை தன் மனைவி மேரி புஷ்பத்தின் பெயரில் செட்டில்மென்ட் எழுதிக் கொடுக்கிறார்.
நீதிமன்றத்தில் தடை
2013ஆம் ஆண்டு அரசு மருத்துவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சுப்பையா, தனது நிலத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். அப்போது புதிதாக அமைக்கப்பட்டிருந்த நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்து நீதிமன்றத்தையும் நாடினார். தனது நிலத்தின் மீது யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்க கீழ் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார். பொன்னுச்சாமி மீது காவல்நிலையில் புகார் அளித்தார்.
வெட்டிக்கொலை
2013 செப்டம்பர் 14 அன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சுப்பையாவை, கூலிப்படையினர் வெட்டிச் சாய்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா, செப்டம்பர் 23ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனை வெளியே இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் கோரமான கொலைச் சம்பவக் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து கைது
நிலத்தகராறு குறித்து சுப்பையா அளித்திருந்த புகார்களின் அடிப்படையில் பொன்னுசாமியும் அவரின் மனைவி மேரி புஷ்பமும் கைதுசெய்யப்பட்டனர். பொன்னுசாமியின் மகன்கள் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பேசிலின் நண்பர்களான வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் அனைவரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர்.
அப்ரூவர் ஆன ஐயப்பன்
இந்த கொலை வழக்கில் 2015ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. 2017ஆம் ஆண்டில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக விஜயராஜ் வந்த பிறகு, சாட்சிகள் விசாரணை சூடுபிடித்தது. அப்ரூவராக மாறிய ஐயப்பன் அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியது.
8 ஆண்டுகளாக நடந்த வழக்கு
இந்த வழக்கில் இதுவரை 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. 173 ஆவணங்கள், 42 பொருள்கள், 5 நீதிமன்ற ஆவணங்கள், 6 எதிர்தரப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சுப்பையாவின் மைத்துனரான மோகன் வழக்கை சீக்கிரம் விசாரித்து முடிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார். கடந்த மே 31ஆம் தேதி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, இந்த வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது.
7 பேருக்கு தூக்கு தண்டனை
தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி, பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இருவருக்கு ஆயுள்தண்டனையை அறிவித்தார் நீதிபதி. பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளார். அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.