Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக சாதியை விரும்பவில்லை என்றால்.. இதை செய்ய தயாரா? பகிரங்க சவால் விட்ட கி வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கோரி, அறப்போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாஜக சாதியை விரும்பவில்லையானால், நாளைக்கே 'நாட்டில் இனி சாதியே கிடையாது; சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக, கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : "எடுக்கப் போகும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பில், சாதியைக் குறிப்பிட்டுக் கணக்கெடுத்தால்தான், சமூகத்தில் இட ஒதுக்கீடு, நாட்டின் வளர்ச்சியில் எது எது மிகவும் வளர்ச்சியடையாத மக்கள் சமூகம் என்பதை அறிந்து, திட்டமிட்டு பரிகாரம் தேட வசதியாக இருக்குமென்பதால், இந்த அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவேண்டுமென்பதை பெரும்பாலான மக்களின் பிரதிநிதிகள், கட்சிகள், இயக்கங்கள் வற்புறுத்துகின்றன.

பிரதமர் மோடியிடம் நேரில் வற்புறுத்தியும், தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.ஏ.) கூட்டணிக் கட்சிக்குள் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சிகளும், அரசின் முதல்வர்களும் (நிதிஷ்குமார் போன்றவர்கள்) வற்புறுத்தி, பிரதமரை, பீகார் மாநிலத்திலிருந்து ஒரு அனைத்துக் கட்சி குழுவே நேரில் சென்று வற்புறுத்தி கோரிக்கையும் வைத்தது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், தமிழகம் போன்ற பல மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கை பரவலாக பல ஆண்டுகளாக வற்புறுத்தி வரப்படுகின்றது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் சாதிவாரியான கணக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை. அதில், சில பல சிக்கல்களும், பிரச்சினைகளும் உள்ளன என்ற கருத்தடங்கிய பிரமாணப் பத்திரத்தை மனுவில் தாக்கல் செய்துள்ளது பிரதமரின் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. என்ன சிக்கல் என்பது விளங்கவில்லை?

பெரும் பாதிப்பு

பெரும் பாதிப்பு

ஏற்கெனவே எடுக்கும் புள்ளிவிவர சேகரிப்பில், சாதி என்ன என்று கேட்டு, (அந்தந்த மாநிலத்திலும், மத்திய பட்டியலிலும் எல்லாம் இருக்கும் நிலையில்) அதைப் பதிவு செய்யவேண்டியதுதானே! இது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த முடிவு அறிவிக்கப்படுகிறது; காரணம், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குத்தான் இதனால் மிகப்பெரும் பாதிப்பு.

நியாயமான காரணம்

நியாயமான காரணம்

நீதிமன்றம் கேட்கும் ஒரே கேள்வி: ஏற்கெனவே இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ள மாநிலங்களிலிருந்து உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்குகள் போடப்படும் நிலையில், நீதிமன்றம் கேட்கும் ஒரே கேள்வி, ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் சாதிக்கென்று உள்ளதா? (Quantified Quota - Data) உண்டு என்பதைச் சொல்லி, அவர்களது நியாயங்களைச் சொல்ல, இந்தக் கணக்கெடுப்பு - சென்சஸ் - சாதிவாரியாகப் பதிவு செய்வதன்மூலமே பாதுகாக்க முடியும்.

கணக்கெடுப்பு தேவை

கணக்கெடுப்பு தேவை

லாலுபிரசாத் யாதவ், "பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்கூட கணக்கெடுப்பு நடைபெறுகின்றன. மனிதர்களான நமக்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்புக் கூடாதா?" என்று கேட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டி., என்ற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர்பற்றி சாதி அடிப்படையில் பதிவு செய்கையில், இந்த மறுப்பின் மூலம் வெகுவாக பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்டோர்தானே. 1980 இல் மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்த இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவான மண்டல் கமிசன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் அளவாக 52 சதவிகிதம் என்பது பதிவாகியுள்ளது!

ஒபிசி எம்பிசி

ஒபிசி எம்பிசி

இந்த 40 ஆண்டுகாலத்தில் மொத்த மக்கள்தொகைப் பெருக்கம் 130 கோடியாக பெருகிய நிலையில், ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினரின் மக்கள்தொகை பெருகியதா? சுருங்கியதா? என்பது முக்கியமாகத் தெரிய வேண்டியது அவசியம் அல்லவா?

மத்திய அரசு

மத்திய அரசு

இட ஒதுக்கீடு இந்த மக்களுக்குக் கிடைக்க இந்தப் புள்ளிவிவரங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்மூலம் வெளிப்பட்டால், அது அவர்களுக்கு அனுகூலமாகிவிடக் கூடும் என்பதைத் தடுப்பதற்குத்தானே, இப்படி சாதிவாரி குறிப்பு எடுக்கப்பட முடியாது என்று மத்திய மோடி அரசு கைவிரிக்கிறது.

பாஜகவிற்கு சவால்

பாஜகவிற்கு சவால்

ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றத் தயாரா? பாஜக சாதியை விரும்பவில்லையானால், நாளைக்கே, 'நாட்டில் இனி சாதியே கிடையாது; சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றத் தயாரா?

சாதி குறிப்பு

சாதி குறிப்பு

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று எல்லாம் 'ஒரே' கோரஸ் பாடுவோர் ஏன் சாதிகளை ஒழித்து 'ஒரே சாதி' என்று சட்டம் போட்டுவிட்டால், இந்த சென்சசில் 'சாதி' குறிப்பு கேட்கப்படவேண்டிய அவசியம் இருக்காதே! அதைச் செய்யத் தயாரா? பிரதமர் மோடியை சமூகநீதியின் காவலர் என்று கூறியது உண்மையானால், இப்படி ஒரு முடிவை எடுத்து, நெருப்புக்கோழி மனப்பான்மையைக் காட்டுமா அவரது அரசு!

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

நாடு தழுவிய அளவில் இதனை வற்புறுத்தி அறப்போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம். இதன்மூலம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது! ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குக் களம் காண அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக்கான உரிமையைப் பெற்று வாழ்ந்திட உரிமைப் போராட்டத்திற்கு ஆயத்தமாவீர்! எதிலும் இரட்டை வேடம் போடும் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்கள், இதிலும் இரட்டை வேட வித்தைகளிலும், வியூகங்களிலும் ஈடுபட்டு, விளையாட்டை நடத்திப் பார்க்கிறார்கள்" இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+