திருமங்கலத்தில் பைக்கில் இருந்து விழுந்த நபர்..உதவிய போலீசுக்கு கன்னத்தில் பளார்..போதையில் அட்டகாசம்
சென்னை: போதையில் பைக் ஓட்டி வந்து கீழே விழுந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்ற சப் இன்ஸ்பெக்டரை அந்த வாலிபர் கன்னத்தில் அறைந்தது சென்னை திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலத்தில் பைக்கில் இருந்து விழுந்த நபர்..உதவிய போலீசுக்கு கன்னத்தில் பளார்..போதையில் அட்டகாசம்
சாலையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.
சில சமயங்களில் விதிகளை மீறக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்புகின்றனர்.

போக்குவரத்து போலீசார்
எனினும் இதுபோன்ற சம்பவங்களின் போது அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் நடக்கும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்று போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அதிகமாகவே நடந்து வருகிறது.

பல மடங்கு அபராதம்
அதுவும் தற்போது திருத்தப்பட்ட புதிய வாகன சட்டத்தின் படி அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு, புதிய அபராத தொகையே விதி மீறல்களுக்கு விதிக்கப்படுவதால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசி அவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

கீழே விழுந்தவரை தூக்கிவிட்ட சப் இன்ஸ்பெக்டர்
இந்த நிலையில், சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் போக்குவரத்து போலீஸ் ஒருவரை வாகன ஓட்டி கன்னத்தில் அறைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தங்கராஜ் என்பவர் 100 அடி சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி விழுந்தார். இதைக் கவனித்த தங்கராஜ் ஓடிச்சென்று அவரை தூக்கி விட்டார்.

கன்னத்தில் அறைந்த இளைஞர்
அப்போது பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் மது அருந்தியிருப்பதை தங்கராஜ் கவனித்தார். உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த அந்த வாலிபருக்கும் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போதையில் இருந்த அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால், மீண்டும் அங்கு வந்த வாலிபர் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜை கன்னத்தில் அறைந்தார். இதனல், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறையில் அடைப்பு
போலீசை அறைந்துவிட்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போலீசை தாக்கிய வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து லோகேஷ்வரன் என்பது தெரியவந்து. 29-வயதான லோகேஷ்வர்மனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications