அண்ணா சொன்னதுதான்.. ஆளுநர் தேவையில்லை என்பதே நிலைப்பாடு.. ஆனால்.. திமுகவுக்கு டிடிவி அட்வைஸ்
சென்னை: நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றினார். ஆனால் அவர் தனது உரையில் சில விஷயங்களை தவிர்த்திருந்தார் என்று சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், 'அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதே நேரத்தில் திமுகவுக்கும் அட்வைஸ் செய்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடரின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டும் இதே போன்று அவர் உரையாற்றியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு எழுதி கொடுக்கும் உரையைதான் ஆளுநர் வாசிக்க வேண்டும். இதுதான் சட்டப்பேரவை மரபு. அந்த வகையில் இந்த ஆண்டும் உரை தயாரிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி முதலமைச்சரிடம் கொடுத்து ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 7ம் தேதி இந்த உரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உரையை ஆளுநர் இன்று வாசித்தார். ஆனால், ஆளுநரின் உரை தொடங்கியதுமே திமுக கூட்டணிக்கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரித்து முழக்கங்களை எழுப்பினர். ஆனால் அவர் இதனை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் கூட்டணி கட்சியினர் முழக்கம் எழுப்பியவாறே கூட்டத்தை புறக்கணித்தனர்.
ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களை சுட்டிக்காட்டிய அவர்கள், சமீபக நாட்களாக அவர் பேசிய அரசியல் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்வதாக கூறினர். மறுபுறம் ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் உரையை முடித்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். வழக்கமாக ஆளுநர் உரையுடன் முதல்நாள் கூட்டத்தொடர் முடிந்துவிடும். அப்படி இருக்கையில் முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்திருப்து பரபரப்பா பேசப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தீர்மானதில், "அச்சிடப்பட்ட பகுதிகளுக்க மாறாக ஆளுநரின் பேச்சில் இடம்பெற்றிருந்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது என முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இதனை கூறி முடித்தவுடன் சற்றும் தாமதிக்காமல் ஆளுநர் ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறிவிட்டார். வழக்கமாக முதல் நாள் கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், முடியும்போது தேசிய கீதமும் இயற்றப்படும். இதன் பின்னரே அனைவரும் வெளியேறுவார்கள்.
அப்படி இருக்கையில், ஆளுநர் பாதியிலேயே வெளியேறிவிட்டார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகள் அனைத்தும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. பாஜக சார்பில் திமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 'இன்றைய நிகழ்வுகள் தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி' என்று கூறியிருக்கார். இது குறித்து அவர் ட்வீட் செய்திருப்பதாவது, "ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.

"ஆளுநர் உரையைத் தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு. அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்தப் பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications