"வைகோ"வை விடுங்க.. அந்த "பட்டாபிஷேகம்".. என்னது வாரிசு அரசியலா?.. துரை வையாபுரி என்ன சொல்றார் பாருங்க
துரை வைகோ செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போது, வாரிசு அரசியல் குறித்து கூறியுள்ளார்
சென்னை: மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியுமே தவிர, வாரிசு அரசியல் என்பதால் அல்ல... வாரிசு அரசியல் என்பதை நானும் ஏற்கவில்லை என்று துரை வைகோ கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, இதுகுறித்த விவாதங்களும் இணையத்தில் வெடித்து கிளம்பி வருகின்றன.
மகனுக்கு பட்டாபிஷேகம் என்ற வார்த்தையை, பெரும்பாலும் பயன்படுத்தி வந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான்.. கருணாநிதியிடம் எவ்வளவு நெருக்கமாக இருந்தாரோ, அடுத்த சில வருடங்களிலேயே அதேஅளவு அதிருப்தியையும் கொண்டிருந்தார் வைகோ.
"கருணாநிதி தன் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த ஆசைப்படுகிறார்.. திமுகவை குடும்ப கட்சியாக்கிவிட்டார்" என்று வெளிப்படையாகவே முன்பு பேசினார் வைகோ.
சிகரெட் லைட்டர் இறக்குமதியை தடை செய்வீர்களா? தீப்பெட்டித் தொழிலை காக்க மாநிலங்களவையில் வைகோ குரல்!
கர்ஜனை
மதிமுக என்ற கட்சி உருவானதே, வாரிசு அரசியல் என்ற விவகாரத்தின் வெடிப்பில் இருந்துதான் என்பதை தமிழகம் அறியும்.. இதற்கு பிறகு வைகோ என்ற ஆளுமை, இளைஞர்களை கட்டிப்போட்டது.. கர்ஜனை பேச்சையும், போராட்ட குணத்தையும் பார்த்து, எத்தனையோ பேர் சிலிர்த்து போனார்கள்.. உயிர்தியாகங்களும் அரங்கேறின.. நடைபயணம் என்றாலே அது என்று வரலாறு சொல்லும் அளவுக்கு வீறுநடைகளை, தன் நடைபயணங்களில் பதிவு செய்தவர் வைகோ.. ஆனாலும், மதிமுக என்ற கட்சி, திமுகவை மிஞ்சி செல்லவில்லை. மீண்டும் திமுகவிலேயே மதிமுக ஐக்கியம் ஆனது..
வையாபுரி
யாரை எதிர்த்து வெளியே வந்தாரோ, அதே கருணாநிதியுடன் இணைந்தார் வைகோ.. யாரை காரணம் காட்டி மதிமுகவை துவங்கினாரோ, அதே ஸ்டாலினிடம் எம்பி பதவியையும் பெற்றார்.. எதற்காக வெளியே வந்தாரோ, அதே வாரிசு அரசியலை, வைகோவும் தற்போது கையில் எடுத்துவிட்டார்.. தனது மகன் துரை வைகோவை கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக கொண்டு வந்த போது, இங்கேயும் வாரிசு அரசியலா என்று எதிர்ப்பு தெரிவித்த மூத்த நிர்வாகிகள் சிலர் மதிமுகவை விட்டு வெளியேறினர். இப்போதுவரை இந்த விமர்சனம் மதிமுக மீது இருக்கத்தான் செய்கிறது..
இருங்க வரேன்
குறிப்பாக, கடந்த 6 மாத காலமாகவே, துரை வைகோவின் எழுச்சியும் அரசியலும் பேசப்பட்டும் வரும்சூழலில், மீண்டும் வாரிசு அரசியல் என்ற பேச்சு திமுகவில் உதயநிதி மூலம் ஒலிக்க தொடங்கி உள்ளது. 2 நாளைக்கு முன்பு, உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு, நேரடியாகவே சென்று உதயநிதிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தார் துரை வைகோ.. பிறகு ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.. அந்த அறிக்கையில், "தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திமுக இளைஞர் அணிச் செயலாளர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்" என்று பிரத்யேகமாக குறிப்பிட்டிருந்தார் துரை வைகோ..
துரை வைகோ
நேற்றைய தினமும் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டி இதுதான்: "ஆளுநர் பதவி தேவையில்லை அது ஒழிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். ஆன்லைன் அவசர சட்ட மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்துவதன் காரணமாக தமிழகத்தில் வாரம் இரண்டு பேர் உயிரிழந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
ஈர்ப்பு சிறப்பு
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்க செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. அதனால் அவர் அமைச்சர் ஆவதற்கு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரவேற்கக் கூடியது... மற்றபடி வாரிசு அரசியல் என்பதை நானும் ஏற்கவில்லை. மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியும்.. திமுகவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய காட்சிகளும் இணைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு ஆளானவரே, வாரிசு அரசியல் குறித்து கூறிய கருத்து தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதுகுறித்த விவாதங்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கி உள்ளன.