ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை.."பயம்"..சட்டசபையில் இபிஎஸ் "கலகம்"..துரைமுருகன் ஆவேசம்
சென்னை: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபடுவதாக கூறியுள்ளார் துரைமுருகன்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு பதிலாக தான் நியமிக்கப்பட்ட ஆர்.பி. உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்காததால் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தனர்.
தமிழக சட்டசபை இரண்டாவது நாள் இன்று கூடியது. பன்னீர் செல்வம் -பழனிச்சாமி ஆகியோர் அருகருகே அமர்ந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

சபாநாயகர் சஸ்பென்ஸ்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பல கடிதங்கள் சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி இருந்தார். முன்னதாக சபாநாயகர் அப்பாவு அவர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் வலியுறுத்தனர். அதற்கு சட்டசபையில் பதில் அளிப்பேன் என்று கூறினார்.

வெளியேற்ற உத்தரவு
சபாநாயகர் எச்சரிக்கையையும் மீறி அவரது இருக்கை அருகே அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார் சபாநாயகர் அப்பாவு. இதனையடுத்து அமளியில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சட்டசபையை விட்டு வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

அவைக்குறிப்பில் ஏறாது
இந்தி எதிர்ப்பு தீர்மானத்தில் மத்திய அரசு ஆதரவாக செயல்பட வேண்டிய அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கூச்சலிட்டு வருவதாகவும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையைக் கண்டு அதிமுக அஞ்சுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவினர் பேசிய எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

துரைமுருகன் ஆவேசம்
இதனையடுத்து சட்டசபையில் பேசிய துரைமுருகன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபடுவதாக துரைமுருகன் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவுக்கு செய்த அட்டூழியங்கள் வெளியே வந்துவிடும் என்பதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

பயந்து விட்டார்கள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கைகள் தாக்கலாகின்றன. தூத்துக்குடியில் மக்களை குருவியை சுடுவது போல காக்காவை சுடுவது போல சுட்டு வீழ்த்தினர். அந்த அறிக்கை இன்று தாக்கலாகிறது. அந்த அறிக்கையை கண்டு அச்சமடைந்து விட்டனர் எனவேதான் சட்டசபையில் திட்டமிட்டு கலகத்தில் ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டினார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications