வாக்களிக்க நேரம் நீட்டிப்பு இல்லை.. கண்டுக்கொள்ளப்படாத தவெக மனு! புறக்கணித்த தேர்தல் ஆணையம்!
சென்னை: வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது.
உரிய பேருந்து வசதி செய்யப்படவில்லை என்று சொல்லி, வாக்காளர்கள் வாக்களிக்கும் நேரத்தை வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று தவெக மனு அளித்திருந்தது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்திருந்த தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு உரிய பேருந்து வசதிகள் செய்து தரப்படவில்லை. பேருந்துகளுக்காகப் பொதுமக்கள் 7 முதல் 8 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கைக்குழந்தைகளுடன் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொங்கல், தீபாவளி பண்டிகைகளைப் போலக் கூடுதல் பேருந்துகளை இயக்கத் போக்குவரத்துத் துறை தவறிவிட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட இடையூறு. முதலமைச்சரின் பேச்சைக் கேட்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஐரோப்பா, கத்தார், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வாக்களிக்க வந்தவர்களும் உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மட்டுமல்லாது மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் பேருந்து வசதிகள் முடக்கப்பட்டதால் மக்கள் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக வாக்குப்பதிவு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், தவெகவின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. ஏற்கென வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் ஸ்லீப் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நிறைவடைந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications