’தாமரை’யை மையமாக வைத்து உருவான புயல்! எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் புரட்சிப் படை? என்னாச்சு?
சென்னை : அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில், பாஜகவை மையமாக வைத்து ஒரு புதிய பிரச்சினை உருவாகியிருக்கிறது. பாஜக காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு புதிவித சிக்கல் முளைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சீனியர்கள்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து பாஜக தலைமையின் தலையீடு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பல விவகாரங்களில் பாஜகவின் தலையீடு அதிகம் இருந்திருக்கிறது.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை பாஜக அதிமுகவில் இருந்து விலகியே இருந்திருக்கிறது. மேலும் பாஜக எதிர்ப்பாளராகவும் ஜெயலலிதா இருந்திருக்கிறார்.

பாஜக தலையீடு
அவரது மறைவுக்கு பின்னர் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைத்த போது அதிக அளவு நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. மத்திய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. அந்த வகையில் விஜயபாஸ்கர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பலர் சோதனைகளுக்கு ஆளாகினர். இதனால் பாஜக தலைமை சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி இணைந்ததற்குப் பிறகு அக்கட்சியின் முழு நிர்வாக கட்டமைப்பை கட்டுப்படுத்துவதில் பாஜக முக்கிய பங்கு வகித்தது.

கட்டுப்படுத்த முயற்சி
துணை முதல்வர் விவகாரம், முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் உள்ளிட்டவற்றில் பாஜக தலையிடும் மிக அதிகமாகவே இருந்தது. தற்போது அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திலும் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் புரியாமல் இருக்கிறது. மத்திய அரசு மூலம் எடப்பாடிக்கு ஆதரவு, மாநில அமைப்புகள் மூலம் ஓபிஎஸ் ஆதரவு என டபுள் கேம் ஆடி வருவதாக கூறுகின்றனர் கட்சி ரத்தத்தின் ரத்தங்கள். நிலைமை இப்படி இருக்க கூட்டணி விவகாரத்திலும் பாஜக தான் தலைமை போல செயல்பட்டு வருவது எடப்பாடி பழனிச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.

தேர்தல் வியூகம்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த இடங்களை பெற வேண்டும் என்றால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அந்த கட்சி விரும்புகிறது. இதன் மூலம் 30 சதவீதமாக இருக்கும் கட்சியின் வாக்கு சதவீதம் 35க்கும் மேல் அதிகரிக்கும். மேலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை தொடந்து முயன்று வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க முடியாது எனவும் குரல் கொடுத்து வருகிறார்.

சீனியர்கள் அதிருப்தி
இதனால் அக்கட்சிக்கும் அவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே பாமக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் ஜெயக்குமார் பேசியதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக தலைமை ஒன்று நினைக்க எடப்பாடியின் ஆதரவு சீனியர்கள் வேறொன்று நினைக்கிறார்கள். கூட்டணியில் பாஜக இடம்பெறுவதை சில சீனியர்கள் விரும்பவில்லை. அந்த வகையில் கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் பாஜக தனித்து போட்டியிட முடியுமா என்று ரீதியில் பேசி வருகின்றனர். இதனால் அந்த கட்சி தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது அதற்கு தொடர்ந்து அக்கட்சி சார்பில் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.

புதிய சிக்கல்
இந்த நிலையில் பாஜகவை மையமாக வைத்து அதிமுகவில் புதுவித சிக்கல் ஒன்று முளைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற வேண்டும் என கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் எனவே பாஜக கூட்டணி தொடர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதை எடப்பாடி பழனிச்சாமி இடமும் அவர்கள் தெளிவாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

புரட்சிப் படை?
அப்படி இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே அவர்கள் திரும்புவார்கள் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். மற்றொரு தரப்பு பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் சிறுபான்மை இன வாக்குகளை இழக்க வேண்டி இருந்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கிய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியவில்லை. எனவே பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடுவது தான் அரசியல் சாணக்கியத்தனமாக இருக்கும் என அவர்கள் வலியுறுத்தி சொல்லுகின்றனர். இதனால் அதிமுகவில் இருக்கும் சீனியர்களை இரு பிரிவாக செயல்பட்டு வருவது எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட பாஜக தரப்பும் தங்கள் தரப்புக்கு ஆதரவாக இருக்கும் சீனியர்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications