ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. எப்போது இடைத்தேர்தல்? 4வது தேர்தலில் வெல்லப்போவது யார்?
சென்னை : சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளார். இதனால், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமகன் ஈவெரா மறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி காலி - அறிவிப்பு
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு நேற்று சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருமகன் ஈவெரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க உள்ளார்.

6 மாதங்களுக்குள் தேர்தல்
ஒரு தொகுதியின் உறுப்பினர் மரணமடைந்தாலோ, அல்லது ராஜினாமா செய்தாலோ, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அந்த தொகுயில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. இதனால் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரைமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இதுவரை மூன்று சட்டப்பேரவை தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இரண்டு முறை தவறவிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியை கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கைப்பற்றியது. முதல்முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமகன் ஈவெரா. இந்நிலையில், அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தலில் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications