ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் காலமானார்
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் உடல்நலக்குறைவால் காலமானார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

ரகோத்தமன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, அண்ணாமலை நியூஸ் என்ற வார இதழில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிபிஐயில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த அவர் தேசிய போலீஸ் அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி பெற்றார்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியாற்றினார் மற்றும் ஊழல் தடுப்பு, பொருளாதார குற்றங்கள், வங்கி மற்றும் பாதுகாப்பு மோசடி செல் மற்றும் சிறப்பு குற்றங்களில் சிபிஐயின் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க வழக்குகளை கையாண்டார்,
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த அவர் அது குறித்து ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். "Conspiracy to Kill Rajiv Gandhi: From CBI Files" என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் கருணாநிதி, வைகோ, ரா அமைப்பு, கிட்டு மற்றும் எம்.கே. நாராயணன் பற்றிய கருத்துகளையும் ரகோத்தமன் பதிவிட்டிருந்தார்.

ராஜிவ் கொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் சிறையில் உள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருக்கிறது என்று விடாது சொல்லி வந்தார் வழக்கை விசாரித்த சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன்!
ஊடகங்களில் நடைபெறும் சிபிஐ தொடர்பான விவாதங்களில் பங்கேற்று கருத்துக்களை கூறி வந்த ரகோத்தமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரகோத்தமன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.












Click it and Unblock the Notifications