சென்னை+3 மாவட்டங்களில்.. 12 நாட்களுக்கும் அம்மா உணவகங்களில் இலவச உணவு.. வீட்டுக்கும் உணவு தேடி வரும்
சென்னை: முழு ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அடுத்த 12 நாட்களுக்கு அமலுக்கு வருவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை உட்பட மேற்குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களிலும், இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ளது. இதை அடுத்து ஆரம்ப காலகட்டத்தில் எவ்வாறு முழுமையாக கெடுபிடிகள் செய்யப்பட்டதோ அதுபோன்ற கெடுபிடிகள் கொண்டுவரப்படும்.
தனியார் வாகனங்கள் ஆட்டோ உள்ளிட்டவை இயங்குவதற்கு அனுமதி கிடையாது. தேனீர் கடைகள் திறக்க அனுமதி கிடையாது. பொது போக்குவரத்து இயங்காது.
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்.. 4 மாவட்டங்களில் இ பாஸ் இணையதளம் செயல்படவில்லை என புகார்
அம்மா உணவகங்கள்
இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே ஏழை எளிய மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசு இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுபற்றி கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏழை எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களில் விலையில்லாமல் மே மாதம் 31-ஆம் தேதி வரை உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.
நள்ளிரவு முதல் ஊரடங்கு
தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலை இல்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
சமுதாய சமையல் கூடங்கள்
மேலும், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் கருதி தற்போது இயங்கி வரும் சமுதாய உணவு கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தீவிரப் படுத்தப்பட்டுள்ள இந்த நிலையில் இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி போதுமான அளவு உணவு சமையல் செய்து இந்த உணவை விலையில்லாமல் தேவைப்படும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
ஜூன் 30
இந்த நடைமுறை ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மக்கள் பெருமளவில் சென்னையை விட்டு வெளியூர்களுக்கு கிளம்பி போகும் நிலையில், அதை ஓரளவுக்கு, தடுக்க இந்த உத்தரவு உதவும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.