‛‛பொதுக்குழு’’.. திமுகவை பார்த்து கத்துக்கோங்க.. அதிமுகவை சீண்டிய தர்மபுரி எம்பி செந்தில் குமார்!
சென்னை: ‛‛கண்ணியம்.. பெருமை.. நேர்த்தி.. அழகு.. பொதுக்குழு எப்படி நடத்துவது என்பதை திமுகவிடம் இருந்து பிற கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என அக்கட்சியின் தர்மபுரி எம்பி செந்தில் குமார் அதிமுகவிற்கு பாடம் எடுத்துள்ளார்.
திமுகவில் 15வது உள்கட்சி தேர்தல் துவங்கி நடந்து வந்தது. பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் பெண்டிங்கில் உள்ளது.
‛வாரிசு அரசியல்’.. ஆளுநர் அரசியலே பேசக்கூடாதே! பாயிண்டை பிடித்து தமிழிசையை சாடிய திமுக ராஜீவ் காந்தி
திமுக தலைவரான ஸ்டாலின்
இந்நிலையில் இன்று சென்னையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் பதவிக்கு முக ஸ்டாலின்,பொதுச்செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு எம்பி டிஆர் பாலு ஆகியோர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அந்ததந்த பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராகி உள்ளார்.
கனிமொழிக்கு பதவி
மேலும் திமுகவில் இருந்து மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சமீபத்தில் விலகினார். இதனால் அவர் வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டார். மேலும் அமைச்சர்களான ஐ பெரியசாமி, பொன்முடி, எம்பி ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அமைதியாக முடிந்த பொதுக்குழு
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்கள், ஆயிரத்து 500 சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றனர். பொதுக்குழு மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. அதிமுகவின் பொதுக்குழு போன்று பிரச்சனைகள் எதுவும் நடக்கவில்லை.
திமுக எம்பி ட்விட்
இந்நிலையில் தான் பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என்பதை திமுகவிடம் இருந்து அதிமுக கற்று கொள்ள வேண்டும் என தர்மபுரி எம்பி செந்தில் குமார் மறைமுகமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛மற்ற கட்சிகள் பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என திமுக பொதுக்குழு பார்த்து கற்று கொள்ள வேண்டும். கண்ணியத்துடன், பெருமையாக மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக, அழகாக இனிதே நடைபெற்றது'' என கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?
முன்னதாக அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் என்பது ஜூன் 23ல் சென்னையில் நடந்தது. அப்போது ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து பொதுக்குழுவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள், ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் மீது தண்ணீர் பாட்டில் வீசினர். மேலும் அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பொதுக்குழுவானது தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்காத நிலையில் அவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர். அப்போது அவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் பொதுக்குழு நடத்துவதை திமுகவில் இருந்து கற்று கொள்ள வேண்டும் என தர்மபுரி எம்பி செந்தில்குமார் கூறியுள்ளார்.