"தாய் மதம்" திரும்பியோர்.. ஹோமம் வளர்த்து வரவேற்ற "விஷ்வ ஹிந்து பரிஷத்".. நம்ம சென்னையில்தான்
சென்னை: வேறு மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு திரும்பியோரரை ஹோமம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஹோமம் வளர்த்து வரவேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது.
வழக்கமாக, வட மாநிலங்களில்தான் இதுபோன்ற 'தாய் மதம் திரும்புதல்' என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையிலும் இது நடைபெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சுமார் 16-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வேற்று மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.
தாய் மதம் திரும்புதல்
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலாக பல்வேறு வலதுசாரி அமைப்புகள் புத்துயிர் பெற்று எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத்தம் உள்ளிட்ட மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு திரும்பும்படி அந்த அமைப்புகள் வெளிப்படையாகவே அறைக்கூவல் விடுத்தன. மேலும், இதற்கு தாய் மதம் திரும்புதல் என்ற பெயரையும் அந்த அமைப்புகள் வைத்தன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சென்னையில் முதன்முறையாக..
இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட பாஜகவால் காலூன்ற முடியாத மாநிலங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் 2015-ம் ஆண்டு முதன்முறையாக இந்து மக்கள் சார்பில் தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் இருந்து திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மீண்டும் சென்னையில்
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள வேதாந்த பவனில் தாய் மதம் திரும்புதல் என்ற பெயரில் நேற்று மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு காரணங்களால் பிற மதங்களில் இருந்து தாய் மதம் திரும்பிய 16-க்கும் மேற்பட்டோருக்கு ஹோமம் வளர்த்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம், மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"இந்து ஏன் தாய் மதம்?"
இந்நிகழ்ச்சியில் வேதாந்தம் பேசுகையில், "இஸ்லாம் மதம் தொடங்கப்பட்டது அரபு நாட்டில். கிறிஸ்தவ மதமோ ஜெருசலேம் நகரில் தொடங்கப்பட்டது. ஆனால், இந்து மதம் தோன்றியது இந்தியாவில்தான். அதனால்தான், இந்து மதத்தை நாங்கள் தாய் மதம் என அழைக்கிறோம். 'அஹம் பிரம்மாஸ்மி' அதாவது 'நான் பரம்பொருளாக இருக்கிறேன்' என இந்து மதம் சொல்கிறது. படையெடுப்பு மற்றும் சில நெருக்கடிகளால் பலர் தாய் மதத்தை விட்டு பிற மதங்களுக்கு சென்றனர். தற்போது அவர்களில் பலர் மீண்டும் தாய் மதம் திரும்புகிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.