அடுத்த அதிரடி.. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசின் சிறப்பு சலுகை.. என்ன தெரியுமா?
ஆதரவற்ற பெண்களுக்கு ரேஷன் கார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: கணவனால் கைவிடப்பட்ட மற்றும் மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள், தங்களுக்கு தனியாக ரேஷன் கார்டு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருவதாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு எளிதாக ரேஷன் கார்டு கிடைக்கும் வகையில் தமிழக அரசு புது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் மூலம் ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர்..
சில மாதங்களில் ரேஷன் கடைகளில் கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இலவசமாக மளிகை பொருட்களை வழங்கியது.. அத்துடன் நிவாரண தொகைகளையும் வழங்கியது..
பெண்கள்
இதையடுத்து, ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் பனைவெல்லம் மற்றும் பயிறு வகைகள் வழங்கப்படும் என்று உணவு வழங்கல்துறையும் தெரிவித்துள்ளது.. இதற்கு நடுவில், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.. இப்படி ஒரு அறிவிப்பு வந்ததில் இருந்தே, அதற்கான விண்ணப்பங்கள் குவிந்து கொண்டிருக்கிறது..
புதிய அறிவிப்பு
நாளுக்கு நாள் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருவது மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது.. பெருத்த வரவேற்பையும் பெற்று வருகிறது.. இந்நிலையில் இன்னொரு புதிய திட்டத்தையும் திமுக அரசு வெளியிட்டிருக்கிறது.. அதன்படி, கணவனால் கைவிடப்பட்டு முற்றிலும் மணவாழ்வை துறந்து தனித்து வாழும் பெண்கள் ரேஷன் கார்டு விண்ணப்பித்தால், அந்த பெண்களுக்கு விவாகரத்து சான்றிதழ் உட்பட எவ்வித சான்றிதழ்களும் இல்லாமல் புதிய ரேஷன் கார்டு வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அறிக்கை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட பெண்மணிக்கு குடும்ப அட்டை வழங்கப்படாத நிலையில், அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நிராதரவு
இந்நிலையில், ஒரு பெண் கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்யப்படும்.
நடவடிக்கை
இதைத் தொடர்ந்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.