காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு! ஆங்கிலேயர்கள் தான் அதை சிதைத்தார்கள்! ஆளுநர் ரவி பேச்சு!
சென்னை: காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு இருந்ததாகவும் அதனை ஆங்கிலேயர்கள் தான் சிதைத்தார்கள் எனவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியர்களிடம் இருந்த ஆன்மிக ஒற்றுமையையும் ஆங்கிலேயர்கள் தான் சிதைத்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
ஆவேசமாக வார்த்தையைவிட்ட ஆர்.எஸ்.பாரதி.. ஆளுநர் மாளிகைக்கு பறந்த உளவு ரிப்போர்ட்.. ஆங்ரி மோடில் பாஜக!
கலாச்சார நிகழ்வு
சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் பவன்ஸ் 2022 கலாச்சார விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ரவி சாதனையாளர்களும் விருதும் பரிசும் வழங்கினார். இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பவன்ஸ் விருதையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் இந்திய கலச்சார வரலாறு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ஆங்கிலேயர்கள் சிதைத்தார்கள்
மேலும், கடந்த 1930 களில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ரீதியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிதைத்ததாக ஆளுநர் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியர்களிடம் இருந்த கலாச்சார, ஆன்மிக ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் தான் சிதைத்தார்கள் எனவும் கூறியிருக்கிறார். ஆளுநரின் இந்தக் குற்றச்சட்டு அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர் விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெற்று நூற்றாண்டை நெருங்கி வரும் நிலையில் ஆளுநர் ஆங்கிலேயர்களை விமர்சித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆளுநர் ரவி பங்கேற்ற பவன்ஸ் 2022 கலாச்சார விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல் கட்சிகள்
அண்மைக்காலமாக ஆளுநர் ரவியின் பேச்சுக்களை திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிப்பதோடு பதிலடியும் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு இருந்ததாக ஆளுநர் கூறியிருப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்குமா என்பது தெரியவில்லை.