சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இன்று அதிகாலை சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் பெய்த மழையால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் சற்றே ஓய்வெடுத்த தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நாமக்கல் நகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நேற்றிரவும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், தி.நகர், அண்ணா சாலை, மைலாப்பூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
பெட்ரோல், டீசல் விலை..மன நிம்மதி தரும் அறிவிப்பு..மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் காணப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்களை ஓட்டி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.