144 தடை உத்தரவு, தமிழகமே லாக் டவுன்: சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்படும் என்பதால் இன்றைய தினமே சொந்த ஊர்களுக்கு கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துவிட்டது.
இதையடுத்து கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுக்க நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
நீட்டிப்பு
தமிழகத்தில் இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களை அதாவது கொரோனா பாதித்த மாவட்டங்களின் எல்லைகளை மூடுமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த மாநிலங்களில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை மூட பரிந்துரை செய்யப்பட்டது.
எல்லைகள்
இதையடுத்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்தில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது.
காய்கறிகள்
அதாவது தமிழகமே லாக் டவுன் ஆகும் சூழல் நிலவியுள்ளது. அந்த காலகட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, மளிகைக் கடை உள்ளிட்ட கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்ட போதும் மக்கள் காய்கறிகளை வாங்க குவிந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது காய்கறி விலை உயர்ந்து விட்டால் என்ன செய்வது, அதனால்தான் ஒரு வாரத்திற்கான காய்கறிகளை வாங்கி வருகிறோம் என தெரிவித்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையம்
இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறையை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் போட்டி போட்டு கொண்டு பேருந்துகளை பிடித்து வருகிறார்கள். இன்று காலை முதல் இருவர் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் தற்போதைய லாக் டவுன் சூழலால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பியுள்ளது.
நாளை மாலை வரை பேருந்து இயக்க அனுமதி
ஒவ்வொருவரும் பேருந்துக்கு செல்வதற்கு முன்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டே உள்ளே விடப்படுகின்றனர். குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து நாளை மாலை வரை வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதற்காக போதிய பேருந்து இயக்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.