30+22.. திடீர் விஸ்வரூபம் எடுத்த எடப்பாடி.. ‘எங்களோடது தான்’ - சிவகாசி சரவெடிக்குப் பின்னணி என்ன?
சென்னை : 'திராவிட மாடல்' விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் மனமாற்றம் அதிமுகவினரையும், அரசியல் பார்வையாளர்களையும் புருவம் உயரச் செய்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பின்னணியில் முக்கியமான சில நகர்வுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'திராவிட மாடல் ஆட்சி' எனக் கூறி வரும் நிலையில், அதனைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி.
திமுக அரசைக் கண்டிக்கும்போதெல்லாம் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி போல என்றெல்லாம் பேசி வந்தார்.
இந்நிலையில், அண்மையில் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தான் முதன்முறையாக, "உண்மையில் திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சியே அதிமுக தான்" எனப் பேசியுள்ளார். இந்த சேஞ்ச் ஓவர் எப்படி நடந்தது என ஈபிஎஸ் தரப்பில் சில தகவல்கள் சிறகடிக்கின்றன.
3 நிமிட ஆடியோ.. அதை மட்டும் ரிலீஸ் பண்ணா எடப்பாடி மொத்தமா 'காலி’ - பகீர் கிளப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்!
முதல்வர் ஸ்டாலின்
கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஏறும் ஒவ்வொரு மேடையிலும் 'திராவிட மாடல் ஆட்சி' என்ற சொற்றொடர் இல்லாமல் பேச்சை முடிப்பதில்லை. உச்சமாக, பிரதமர் மோடி இருக்கும் மேடையிலேயே திராவிட மாடல் என்றால் என்ன என்பது பற்றி பாடம் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் கிளப்பிய இந்த 'திராவிட மாடல்' கான்செப்ட் வடக்கு வரை தற்போது பரவிவிட்டது. அந்த அளவுக்கு முதல்வரும், அமைச்சர்களும், திமுகவினரும் தொடர்ந்து திராவிட மாடல் பற்றிப் பேசி வருகின்றனர்.
திராவிட மாடல் வளர்ச்சி
தமிழகத்தின் வளர்ச்சி, மற்ற மாநிலங்கள் எதையும் விட அதிகமாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் எனக் கூறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், காலை சிற்றுண்டி உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்களை "திராவிட மாடல்" என்றே திமுகவினர் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதே திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
அரை நூற்றாண்டு திராவிட ஆட்சி
திராவிட மாடல் அரசு இன்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அரசாக உள்ளது என்றும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தைத்தான் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்றும் கூறி வருகிறார். தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளைப் பிற மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தத் துடிப்புடன் உள்ளதாகவும் ஸ்டாலின் பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சி என்பதை கடந்த 50 ஆண்டுகால திமுக, அதிமுக எனும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி மட்டுமல்லாமல், நீதிக்கட்சியின் ஆட்சியையும் சேர்த்தே மொத்தமாக ஒரு தட்டில் வைத்தே பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதிமுகவின் எதிர்வினை
முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும், திராவிட மாடல் கொள்கையை முன்வைத்து வரும் நிலையில், அதனை எதிர்த்தும் விமர்சித்துமே அதிமுகவினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் முதல்முறையாக அதிமுக ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி என்ற ரீதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அண்மையில் சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அடித்தளமிட்டதே அதிமுக தான் என்றார். மேலும் திராவிட மாடல் குறித்தும் பேசினார்.
திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்
"தமிழகத்தை அதிகப்படியான நாட்கள் ஆண்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு. திராவிட மாடல், திராவிட மாடல் என மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்கிறார் ஸ்டாலின். அப்படி என்ன தான் செய்தீர்கள்? உண்மையில் திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சியே அதிமுக தான். திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் என ஒரே போடாகப் போட்டார் எடப்பாடி பழனிசாமி. இத்தனை மாத காலமாக திராவிட மாடல் ஆட்சி என்பதனை விமர்சித்துப் பேசி வந்த ஈபிஎஸ், முதன்முறையாக எங்கள் ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி எனப் பேசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பின்னணி
எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் மனமாற்றம் திமுகவினரையும் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது. இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியிடம் இந்த சேஞ்ச் ஓவர் எப்படி வந்தது என்பது பற்றி அவரது ஆதரவாளர்கள் சில தகவல்களைச் சொல்கிறார்கள். அதாவது, கடந்த நான்கைந்து மாத காலமாக தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பலரது ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார். ஓபிஎஸ் விவகாரம் மட்டுமல்லாமல், சமீப சில காலமாக திமுக அரசை எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஈபிஎஸ்.
சொந்தம் கொண்டாட
2024 தேர்தல் நெருங்குவதால் பிரஷர் அதிகரித்திருப்பதன் காரணமாக திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார். அப்போதுதான் திமுகவினரின் திராவிட மாடல் பரப்புரை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது மேற்கொண்ட ஆலோசனைகளின் விளைவாகவே, திமுகவை விட அதிமுகவே திராவிட மாடல் ஆட்சியை சொந்தம் கொண்டாடுவதற்கான தகுதியுள்ள கட்சி எனும் முடிவை எடுத்து, இனி, இந்த திசையிலேயே பொதுவெளியில் பேசவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்.
அதிமுக - 30 ஆண்டுகள்
அதாவது, அதிமுக கட்சி ஆரம்பித்து தேர்தலைச் சந்தித்த கடந்த 1977 முதல் தற்போது வரையிலான 45 ஆண்டு இடைவெளியில் அதிக முறை ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. அதாவது சுமார் 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி இருந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அதிமுக முதல்வர்கள் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளனர்.
திமுக - 22+
திமுகவைப் பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என முதல்வர்கள் வரிசையில் 1967 முதல் இன்று வரை சுமார் 22 காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளது. தமிழ்நாட்டை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த நாம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்துவதை விட திமுகவினரே முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். திராவிட மாடல் என்ற பேச்சு கடந்த ஓராண்டாக அதிகமாக பொதுவெளியிலும் புழக்கத்தில் இருக்கிறது. இதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளனர்.
திராவிட மாடலே நாங்க தான்
22 ஆண்டுகள் ஆண்ட கட்சியே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை சொந்தம் கொண்டாடும்போது நாம் சும்மா வேடிக்கை பார்க்க முடியாது, திமுகவின் திராவிட மாடல் முழக்கத்தை உடைக்க வேண்டும், இதை இனி மக்களிடம் விளக்கி திமுகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈபிஎஸ் தீர்மானித்தாராம். அதன்படியே, சிவகாசியில் திடீரென இறங்கி ஒரே போடாகப் போட்டார், இனியும் எல்லா மேடைகளிலும் திராவிட மாடல் நாங்கள் தான் எனப் பேசுவார், இனி அதிமுகவின் முழக்கமும் அதுவே ஆகும், திமுகவினர் ஆஃப் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர்.