சுறுசுறுப்பில் எறும்பு! வேகத்தில் குதிரை! நினைவாற்றலில் யானை! கருணாநிதியும் பாராட்டும் ஒரு பார்வை!
சென்னை: கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் நாளைய தினம் அவரது முழு உருவச் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்.
இதற்கான விழா ஏற்பாடுகளை தமிழக அரசும், திமுகவினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.
எழுதுகோல் தான் எனது செங்கோல்! நாளை கருணாநிதி சிலை திறப்பு விழா! சிறிய பிளாஷ்பேக்!
இதனிடையே பெரியார் மற்றும் அண்ணாவின் இதயங்களில் கருணாநிதி எந்தளவு இடம்பெற்றிருந்தார் என்பதற்கு அவர்கள் அளித்த பாராட்டுக்களே சான்றாக திகழ்கின்றன.
பெரியார் பாராட்டு
பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் பெரியார் கருணாநிதியை பற்றி கூறுகையில், ' அறிவில் சிறந்தவர் என்றும் நிருவாகத்தில் சிறந்தவர் என்றும் பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதில் சிறந்தவர்' என்றும் பாராட்டியிருக்கிறார். பெரியாரிடம் இருந்து ஒருவர் பாராட்டு பெறுவது எவ்வளவு பெரியது என்று அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
தண்டவாளத்தில் தலை
திமுக நிறுவனரும் பேரறிஞர் என்றழைக்கப்படுபவருமான அண்ணா கருணாநிதியை பற்றி குறிப்பிடுகையில், 'தண்டவாளத்தில் தலைவைத்து படு' என்று சொன்னாலும், 'அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்' என்று சொன்னாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவர் என் தம்பி கருணாநிதி' என்று பாராட்டியிருக்கிறார். மேலும், 'என் தம்பி பாளையங்கோட்டை தனிமைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு கிடந்த இடம்தான் புனித பூமி' என்றும் போற்றினார்.
சுறுசுறுப்பில் எறும்பு
திமுகவில் 45 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்தவரும் பேராசிரியர் என திமுகவினரால் அழைக்கப்படுபவருமான க.அன்பழகன் கருணாநிதி குறித்து கூறுகையில், 'எறும்பு போன்ற சுறுசுறுப்பும் - யானை போன்ற நினைவாற்றலும் - எருது போன்ற ஊக்கமும் - குதிரை போன்ற விரைவுத் திறனும் நாட்டை ஆள்பவரிடம் நிரம்ப வேண்டும் எனில் இவை யாவற்றிலும் முன்னிற்பவர் கலைஞர்' என்று குறிப்பிட்டார்.
அரசு சார்பில்
இதுவரை பல இடங்களில் கருணாநிதி சிலைகள் நிறுவப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் திமுக சார்பில் நிறுவப்பட்டதாகும். அரசு சார்பில் பிரம்மாண்ட முறையில் கருணாநிதிக்கு நிறுவப்படும் முதல் சிலை என்பதால் இந்த விழாவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.