முதல்வர் ஏன் அப்படி ட்வீட் போட்டார்.. ஏன் தூக்கினார்? ஒன்னும் புரியல.. குழப்பத்தில் தமிழிசை!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் என தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். அப்படி செய்தால் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யப்படும் சேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முதல்வர் பிறமாநிலங்களில் தமிழை பயிற்றுவிக்க கூறுகிறார் என்றால் தமிழகத்தில் இந்தியை வரவேற்கிறார் என்று அர்த்தம் என கூறினார். அப்படி நடந்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
சுதாரிக்காவிட்டால்.. மேலும் மேலும் கட்சி கரைந்தால்.. அரசியலில் அடுத்த விஜயகாந்த்.. தினகரன்தான்!
ட்வீட்டை நீக்கிய முதல்வர்
முதல்வரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு பெரும் விவாதப்பொருளாகவும் ஆனது அந்த ஒற்றை ட்விட். இதைத்தொடர்ந்து அந்த ட்வீட்டை நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் ட்வீட்டை நீக்கியதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
நீட்டுக்கு எதிரான பரப்புரை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அடுத்த முறை அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள். நீட்டுக்கு எதிரான பரப்புரை முறியடிக்கப்படும் என்றார்.
தமிழக அரசின் சின்னம் - கண்டனம்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறையில் தமிழக அரசின் சின்னம் பதியப்பட்ட டைல்ஸ் பயன்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது. யார் செய்திருந்தாலும் அதனை கண்டிக்கிறேன் என தமிழிசை தெரிவித்தார்.
தமிழாக இருந்தால் மகிழ்ச்சி
மொழிப்பரிமாற்றம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருக்கிறார். அது தமிழ்மொழியாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சிதான்.
விரைவில் நதிகள் இணைப்பு
காவிரி கோதாவரி நதிகள் இணைப்பு திட்டம் 60000 கோடி ரூபாய் செலவில் மிக விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது முதல் பணியாக காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பை மிக விரைவில் செயல்படுத்துவார் என்று தமிழிசை கூறினார்.
ஏன் நீக்கினார் என தெரியவில்லை
மேலும் தமிழை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்வீட்டை முதல்வர் பழனிசாமி நீக்கியுள்ளாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் எதற்காக அப்படி ட்வீட் செய்தார் எனவும் ஏன் தனது ட்வீட்டை நீக்கினார் எனவும் தெரியவில்லை என்றார்.