ரஜினி கேட்டபடி சொத்து வரியை ரத்து செய்திருந்தால்.. என்ன நடந்திருக்கும்? அதிரவைக்கும் நிலவரம்!
சென்னை: ரஜினி கேட்டபடி சொத்து வரியை தமிழக அரசு ரத்து செய்திருந்தால் அதேபோல் பலரும் கேட்டு வந்திருப்பார்கள். தர்ம சங்கடமான நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருக்கும் என்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய பிரபலம் என்பதாலேயே நேற்று சொத்து வரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. உண்மையில் நேற்று சமூக வலைதளங்களில் ரஜினி சொத்து வரி விலக்கு கேட்டதை பலரும் விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
கோடிகளில் சொத்து இருந்தாலும் , வாடகையே வராத நாட்களுக்கு சொத்து வரி எப்படி கட்ட முடியும் என்கிற ஆதங்கத்தில் ரஜினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
என்ன பிரச்சனை
நியாயமாக பார்த்தால் சமானியர்களை போலவே அவரும் சொத்து வரி விலக்கு கேட்டிருக்கிறார். ஆனால் நீதிமன்றம் சொன்னபடி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவகாசம் அளித்து, அவர்களிடம் தள்ளுபடி உண்டா இல்லையா என்பதை தெரிந்த பின்னர் வழக்கு தொடந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் உடனே வழக்கு தொடர்ந்ததுதான் நேற்று பிரச்சனையானது.
ரஜினி கேட்டது என்ன
ரஜினி என்ன கேட்டார் என்று இப்போது பார்ப்போம். மார்ச் பிற்பாதியில் இருந்து செப்டம்பர் வரை திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த முடியாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் அரசு விதித்தது. அத்துடன் திருமண மண்டபத்திற்கு புக்கிங் செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் ஆறு மாதங்களாக திருமண மண்டபங்கள் பூட்டிக் கிடந்தன. யாருக்கும் வருவாய் இல்லை. ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்திற்கும் வருவாய் இல்லை. இதன் காரணமாகவே அவர் வரி தள்ளுபடி கேட்டு மனு தாக்கல் செய்தார்.
சாலை வரி ரத்து
ரஜினிகாந்த கேட்டபடி வரி தள்ளுபடியை அரசு அறிவித்திருந்தால், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கும் இதேபோல் வரி தள்ளுபடி சய்ய வேண்டும் என்று வந்து நின்றிருப்பார்கள். உதாரணமாக பேருந்து உரிமையாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக பேருந்துகள் ஓடாத நிலையில் சாலை வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் முதல் ஆளாக தங்களுக்கும் வரி தள்ளுபடி வேண்டும் என்று வந்து கேட்டிருப்பார்கள்.
வீட்டு வரி ரத்து
இதேபோல் ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் கடை வைத்துள்ளவர்கள் வாடகை தள்ளுபடி கேட்டு வருவார்கள். சென்னையில் கடைகள் வைத்திருப்போர், வீடு வைத்திருப்போரும் வாடகை கிடைக்கவில்லை என்று வரி தள்ளுபடி கேட்டிருப்பார்கள். வறுமை காரணமாக தங்கள் வீட்டு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பலரும் வந்திருப்பார்கள். ஆனால் அரசு ரஜினியின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒருவேளை அரசு இதில் ஏதேனும் முடிவு எடுந்திருந்தால் நிச்சயம் தர்மசங்கடத்தில் சிக்கி இருக்கும்.