ஓபிஎஸ் + சசி + டிடிவி.. அடித்து சொன்ன அமித் ஷா.. கொந்தளித்த எடப்பாடி! பிரச்சனை தொடங்கியது இங்குதான்?
சென்னை: தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக இருப்பதாக காவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவின் இந்த திட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி முட்டுக்கட்டை போட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தது?
2024 லோக்சபா தேர்தலை நோக்கி பாஜக தீவிரமான பணிகளை செய்து வருகிறது. கட்சிக்குள் புதிதாக நிர்வாகிகளை சேர்ப்பது, பூத் கமிட்டிகளை உருவாக்குவது என்று பாஜக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
லோக்சபா தேர்தலில் 4 -5 பாஜக எம்பிக்கள் வெற்றிபெற்றால், தமிழ்நாட்டிற்கு அமைச்சர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே சில பாஜக தலைவர்கள் மிக தீவிரமாக உழைக்க தொடங்கி உள்ளனர்.

பாஜக திட்டம் என்ன?
இதை முன்னிட்டே பாஜக சார்பாக மெகா கூட்டணி ஒன்றிற்கான பிளான்கள் களமிறக்கப்பட்டு உள்ளதாம். அதாவது அதிமுக உடைந்து இருப்பதாலேயே வாக்குகள் சிதறுகிறது. அதிமுகவில் எல்லா தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் வாக்குகள் சிதறாது. இதை பயன்படுத்தி பாஜகவும் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பயன் பெற முடியும். பாஜக வெல்வதற்கு அதிமுகவின் வலிமை மிக முக்கியம் என்று பாஜக டாப் நிர்வாகிகள் கருதுகிறார்கள். ஏனென்றால் அதிமுகவை நம்பித்தான் பாஜக இப்போதும் இருக்கிறது.

பிளான் இதுதான்
முக்கியமாக அதிமுக உடைந்த காரணத்தால் சாதி ரீதியாக வாக்குகளும் சிதற தொடங்கி உள்ளன. அதாவது முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அதிமுகவில் பிரிந்து சென்ற தலைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை கருதுகிறதாம். அதாவது சசிகலா + டிடிவி தினகரன் + ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு மெகா கூட்டணி உருவாக்க வேண்டும்.

மெகா கூட்டணி
இவர்கள் + பாமக + தேமுதிக போன்ற கட்சிகள் இணைந்தால் அதிமுக கூட்டணி மிக வலிமையாக மாறும். இதன் மூலம் லோக்சபா தேர்தலிலும் திமுகவை வீழ்த்த முடியும் என்று பாஜக கருதுகிறதாம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் . இந்த சந்திப்பில்தான் எடப்பாடியிடம் இந்த இணைப்பு பற்றி அமித் ஷா பேசியதாக தெரிகிறது. எல்லோரும் சேர்ந்து இருக்கலாமே என்று அவர் பேசி இருக்கிறார். ஆனால் அமித் ஷா இதற்கு பிடி கொடுத்து பேசவில்லை.

என்ன நடந்தது?
அதாவது, இவர்கள் இல்லாமலே அதிமுக வலிமையாகவே இருக்கிறது. சட்டசபை தேர்தலில் 60 இடங்களை வெல்ல என் ஆளுமைதான் காரணம். அவர்களுக்கு தொண்டர்கள் சப்போர்ட் இல்லை. அவர்கள் இல்லாமலே நாம் வெல்ல முடியும் என்று எடப்பாடி கொந்தளிப்புடன் பேசி இருக்கிறாராம். அந்த மீட்டிங்கில்தான் எடப்பாடி - பாஜக இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அமித் ஷாவை சென்னை வரும்போதெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி சொல்வதற்கு காரணம் இந்த விரிசல்தான் என்கிறார்கள். பாஜகவின் மெகா கூட்டணி திட்டத்திற்கு தொடக்கத்தில் இருந்தே எடப்பாடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications