என்ன அப்படியே ரூட் மாறுது.. ‘அவருக்கு பக்கத்திலா?’ அப்செட்டான எடப்பாடி - ‘நெக்ஸ்ட் மூவ்’ பரபர ஆலோசனை
சென்னை : சட்டமன்ற கூட்டத்தொடர் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், முதல் நாள் கூட்டத்தைப் புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஓபிஎஸ் ஈபிஎஸ் பஞ்சாயத்து காரணமாக, சட்டமன்ற இருக்கைகளை மாற்ற கோரிக்கை விடுத்தும் சபாநாயகர் இதுவரை தெளிவான பதிலை சொல்லவில்லை என்பதால் ஈபிஎஸ் தரப்பு அப்செட் ஆகியுள்ளது.
இந்நிலையில் 17ஆம் தேதி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம். ஓபிஎஸ் அருகில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டால் தர்மசங்கடம் என அவர் நினைப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், எடப்பாடி பழனிசாமி முதல் நாள் கூட்டத்தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஓபிஎஸ் பங்கேற்பாரா என கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது ஈபிஎஸ் டீம் இப்படி முடிவெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி மோடில் எடப்பாடி.. 17, 20, 26ம் தேதிகளில் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டங்கள்!
சட்டமன்ற கூட்டத்தொடர்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார், ஓ பன்னீர்செல்வம் இருவரில் சபாநாயகர் யாரை அங்கீகரிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுகுறித்து இதுவரை சபாநாயகர் அப்பாவு எதையும் தெளிவுபடுத்தவில்லை. சட்டசபை மரபின் படி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால் கண்ணியத்துடன் நடந்துகொள்வார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. எனினும், அவர் ஓபிஎஸ் தரப்புக்குச் சாதகமாக செயல்படக்கூடும் என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, சமீப சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கப்பட இருப்பது பற்றியும் ஆலோசித்துள்ளார். திமுகவின் திட்டத்தைப் பார்த்தால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஓபிஎஸ்ஸையே அமர வைத்து விடுவார்கள் போல இருக்கிறது. இதனால், முதல் நாள் சட்டமன்றத்தை புறக்கணித்து விடலாமா என ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார்.
கண்டிப்பா போகணும்
அதற்கு முன்னாள் அமைச்சர்கள் சிலர், சட்டசபைக்குள் நாம் கட்டாயம் அன்று போக வேண்டும். நமக்கு எதிராக திமுக செயல்பட்டால் அமளி செய்து எதிர்ப்பைக் காட்டுவோம். நம் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறது, அத்தனை எம்.எல்.ஏக்களின் கையெழுத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அதையும் மீறி 4 எம்.எல்.ஏக்கள் உள்ள ஓபிஎஸ்ஸுக்கு அவர்கள் ஆதரவளித்தால், வருவதைப் பார்த்துக்கொள்ளலாம் எனக் கொதிப்போடு கூறியுள்ளனர்.
ஈபிஎஸ் உறுதி
அமளி ஆவதைப் பற்றி பிரச்சனை இல்லை. ஆனால், அவர் முகத்தில் விழிக்க வேண்டுமா என்பதுதான் யோசனை. முதல் நாளில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டு சபையை ஒத்திவைக்கத்தான் போகிறார்கள். அன்று ஓபிஎஸ் தரப்புக்கு சீட் எப்படி போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். எனக்கு பக்கத்தில் அவருக்கு சீட் இல்லை என்றால் தான் என்னால் கூட்டத்தொடருக்கு வர முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
மற்ற எம்.எல்.ஏக்கள்
இதனால், அக்டோபர் 17ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருவது சந்தேகம் தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதே நேரம், அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. சட்டப்பேரவை கூடுவதற்குள் சபாநாயகரிடம் தெளிவான பதில் வருகிறதா என்று பார்க்கலாம், அதைப் பொறுத்து அடுத்தகட்டமாக முடிவெடுக்கலாம் என்றும் ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேருக்கு நேர்
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ஒரே மேடையில் இருந்தாலும் கூட இருவரும் அன்று நேருக்கு நேர் முகம்பார்த்துக் கொள்ளவில்லை. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடந்தபோது ஓபிஎஸ் அங்கு செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு கேட்டு சென்னை வந்தபோது கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தனித்தனியாகவே சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
4 மாதங்கள் ஆகிவிட்டது
சமீபத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளன்று ஓபிஎஸ் வருகிறார் என்றதுமே, அவசர அவசரமாக பெரியார் படத்தையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது ஈபிஎஸ் தரப்பு. கடைசியாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜூன் மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது தான் பேசிக்கொண்டனர். கடந்த 4 மாதங்களாக இருவரும் முகம் பார்த்துப் பேசிக்கொள்ளாத நிலையில், சட்டமன்றத்தில் அருகருகே அமர்வது தர்ம சங்கடமான விஷயம் தான். இதனால் தான் ஈபிஎஸ் அதனை தவிர்க்க நினைப்பதாக கூறப்படுகிறது.