3 போட்டிகளில் 22 ரன்கள்.. "கேஎல் ராகுல் இந்திய அணிக்கு தேவையா?" தொடர்ந்து சொதப்ப காரணம் என்ன?
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்புவதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் சிறிய அணிகளின் செயல்பாடுகள் மற்றும் மழைக் காரணமாக உச்சக்கட்ட சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே, இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து, இந்தியாவை பதற வைத்த நெதர்லாந்து, மழையால் நின்றுபோன ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் ஆட்டங்கள் அனைத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணங்கள்.
அதேபோல் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அனைத்து நாட்டு தொடக்க வீரர்களும் சொதப்பி வருவதும் இன்னொரு சுவாரஸ்யம். முதல் 10 ஓவர்களில் ஒருநாள் போட்டியை போன்றும், அடுத்த 10 ஓவர்களை டி20 ஆட்டம் போன்றும் ஆடுவது ரசிகர்களை பதற்றத்திலேயே வைத்துள்ளது. ஏனென்றால் சிறிதாக பிசிறு தட்டினாலும் நிச்சயம் தோல்விதான்.
2017 சாம்பியன்ஸ் டிராபி டூ 2022 உலகக்கோப்பை.. அஸ்வின் கொடுத்த மாஸ் கம்பேக்.. எப்படி சாதித்தார்?
இந்திய அணி தோல்வி
நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அனி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பில்லாத ஆட்டமும், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் மிகமுக்கியக் காரணம். அதில் கேஎல் ராகுல் பேட்டிங் மீது அதிகளவிலான விமர்சனங்கள் அனைத்து தரப்பிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கேஎல் ராகுலின் பேட்டிங்கில் என்னதான் பிரச்சினை என்று பார்த்தால், யாருக்கும் எதுவும் தெரியாது.
3 போட்டிகளில் 22 ரன்கள்
இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் கேஎல் ராகுல் அடித்துள்ள ரன்கள் 4, 9, 9. மொத்தமாக 3 போட்டிகளிலும் சேர்த்து 22 ரன்கள் விளாசி இருந்தாலும், கேஎல் ராகுலுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருக்கிறது. இதற்கு காரணம், டெக்னிக்கலாக கேஎல் ராகுல் பேட்டிங்கில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி பிரச்சினை இருந்தாலும், அதனை வேகமாக சரிசெய்து களத்தில் தன்னை அனைவர் முன்பும் நிரூபித்து காட்டக் கூடியவர்.
மனநிலை பிரச்சினை
அதனால் மட்டுமே கேஎல் ராகுல் இந்திய அணியில் தொடர்ந்து பயணிக்க முடிகிறது. டெக்னிக்கலாக பிரச்சினை இல்லையென்றால், கேஎல் ராகுலிடம் ஏன் ரன்கள் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவரின் பிரச்சினை மனரீதியிலானது. அசாத்திய திறமை கொண்ட விராட் கோலியே சில மாதங்களுக்கு முன் மனநிலை சரியாக இல்லை என்று பேசி இருந்தார். அதுதான் இப்போது கேஎல் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.
எப்போது தோல்விகளை சந்திக்கிறார்?
தேவையில்லாத பிரஷரையும், பொறுப்பையும் எடுத்துக் கொண்டதே கேஎல் ராகுலுக்கு டி20 உலகக்கோப்பையில் பிரச்சினையாக மாறியுள்ளது. தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்று முனைப்பும், தோல்வியடைந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுமே கேஎல் ராகுல் மோசமாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் சரி, இந்திய அணியிலும் சரி, கேஎல் ராகுல் எப்போதெல்லாம் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது எல்லாம் தோல்விகளை சந்திப்பார்.
கவலையின்றி ஆடுவாரா?
உடனடியாக இவற்றை கடந்து வருவதற்கான வழி அணி நிர்வாகம் இவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே. அதேபோல் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டுவிட்டால், அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் கம்பீரமாக இந்திய அணி களமிறங்கும். ரிஷப் பன்ட்டை போல் ஆட்டமிழந்தாலும் பிரச்சினை இல்லை என்று கேஎல் ராகுல் பேட்டை சுழற்ற தொடங்கினால், கேஎல் ராகுலின் அதிரடிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எழுந்து நின்று கைதட்டும். அதற்கு கேஎல் ராகுல் தான் மனசு வைக்க வேண்டும்.