தங்கமணி ஆவேசத்துக்கு மூல காரணமே இதானா..? கொங்கு மண்டலத்தில் ‘கொக்கி’ போட்ட ஓபிஎஸ்.. பக்கா மூவ்!
சென்னை : ஈபிஎஸ் ஆதரவாளரான தங்கமணி, திடீரென அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை வெட்ட வெளிச்சமாகப் போட்டு உடைத்ததற்குப் பின்னணி இதுதான் எனப் பற்றவைக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
நாமக்கல் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து சமீபத்தில் மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்த நிலையில், சாதி ரீதியிலான சில மூவ்களால் நாமக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான சூழல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாம்.
கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டை எனச் சூளுரைத்து வரும் எடப்பாடி அன்கோவின் தங்கமணி, நாமக்கல்லிலேயே ஓபிஎஸ் தரப்பின் மூவை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தான், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பெரிய தலைகள் யாரும் ஓபிஎஸ் அணிக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, அதிரடியாக ஆக்ஷனில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தேவர் தங்க கவசம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்குமே இல்லை..? 2017 முடிவு தானா? வங்கி அதிகாரிகள் பரபர ஆலோசனை
யுத்தத்தில் யார் கை ஓங்கும்?
அதிமுக, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டுபட்டுக் கிடக்கிறது. இந்த யுத்தத்தில் இன்றைய தேதியில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைககால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அதேசமயம் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு, கட்சி் தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் என்ன முடிவெடுக்கப் போகி்ன்றன என்பதை பொறுத்து தான் யார் கை ஓங்கும் என்பது தெரியவரும்.
நாமக்கல் மா.செக்கள்
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், முக்கிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக மூன்றாகப் பிரித்து 3 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் ஓபிஎஸ். அதன்படி நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளராக ஜெயா முருகேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ.கே.நாகராஜன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நாமக்கல் பழனிசாமி ஆகியோரை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ்ஸின் மூவ்
நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் ஈபிஎஸ் தரப்பில் மாவட்ட செயலாளராக இருக்கும் நிலையில், பெரிய வாக்கு வங்கி கொண்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்துள்ளார் ஓபிஎஸ். இது அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்ற அலையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது.
தங்கமணிக்கு குடைச்சல்
இதனால் தான், நாமக்கல் மாவட்டத்தில் கோலோச்சி வரும் ஈபிஎஸ் ஆதரவாளாரான முன்னாள் அமைச்சர் தங்கமணி டென்ஷன் ஆகியுள்ளார் என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் பவர் காட்டி வரும் ஈபிஎஸ் தரப்பினருக்கு, ஓபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கையால் குடைச்சல் ஏற்பட்டுள்ளதாம். ஓபிஎஸ் நியமித்துள்ள மாவட்ட செயலாளர்கள், ஈபிஎஸ் அணியில் இருந்து ஆட்களைத் தூக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்களாம். இது தங்கமணியின் காதுக்குப் போனதால் தான் தங்கமணி, ஓபிஎஸ் டீமை அட்டாக் செய்து வருகிறார் என்கிறார்கள்.
ஓபிஎஸ் மீது அட்டாக்
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை பொதுச்செயலாளர் பதவியைத் தருகின்றேன் எனச் சொன்னார். ஓபிஎஸ் அவர் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டார். அதையும் தருகிறேன் எனச் சொன்னார். ஆனால், ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை, வைத்திலிங்கம் எல்லா பேச்சுவார்த்தையையும் கெடுத்துவிட்டார். கட்சி பிளவுபட வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஈபிஎஸ் தரப்பு எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார்.
நாமக்கல் - இப்பவே
மேலும், "நம் கட்சியில் உழைத்தால், அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நீங்கள் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தால் நாமக்கல் மாவட்டத்தை மீண்டும் அ.தி.மு.க கோட்டையாக மாற்றிவிடலாம். அதற்கு நாம் இப்போதிருந்தே தயாராக வேண்டும்." எனப் பேசியிருக்கிறார். தங்கமணியின் இந்தப் பேச்சுக்கு பின்னணியில், நாமக்கல் மாவட்ட அதிமுக நிலவரம் தொடர்பாக அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமே காரணம் என்று கூறுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
பிரபாகர் சொன்ன வார்த்தை
சமீபத்தில், தங்கமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரும், "நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். கட்சி வரலாறு தெரிந்தவர்கள், தங்கமணியால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட, பல காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்கள், புதிய நிர்வாகிகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அதை பார்த்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கவலையும், அச்சமும் அடைந்துள்ளார். அதனால் தங்கமணி பொய்யான தகவல்களை பேசி வருகிறார்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.