அமமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. இசக்கி சுப்பையாவும் விலகல்?
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியாக ஓட்டம் பிடித்து வரும் சூழலில் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைதேர்தல் படுதோல்விக்கு பிறகு அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அமமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வனுக்கும் தினகரனுக்கும் அந்த பேட்டி காரணமாக மோதல் வலுத்தது.
இதனால் அமமுகவில் இருந்து வெளியேறிய தங்க தமிழ்ச்செல்வன் பின்னர் திமுகவில் அடைக்கலமானார். இவரைத் தவிர பல்வேறு நிர்வாகிகளும் அமமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
திருநெல்வேலியில் மாவட்ட செயலாளர், திருநெல்வேலி மக்களவை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறினர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கி இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செந்தில் பாலாஜி வெளியேறிய பிறகு அமமுகவுக்கு பொருளாதார ரீதியாக இசக்கி சுப்பையா பல உதவிகளை செய்து வந்ததாக இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தற்போது அசோக் நகரில் உள்ள அமமுகவின் கட்சி அலுவலகமும் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தினகரனுக்கும் இசக்கி சுப்பையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விரிசல் இப்போது அதிகமாகி இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பான தகவல் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இசக்கி சுப்பையா, நாளை காலை செய்தியாளர்களை சந்தித்து அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார். இசக்கி சுப்பையாவை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் மதில்மேல் பூனையாக உள்ளதாக கூறப்படுகிறது.