சசிகலாவின் ரூ.15 கோடி பினாமி சொத்து..உறுதி செய்த உச்சநீதிமன்றம்..முடக்கிய வருமான வரித்துறை
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.
சென்னை: சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடன் சசிகலாவிற்கு அடுத்தடுத்து சோதனைகள் ஏற்பட்டு வருகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பினார் சசிகலா. கட்சியும் கை விட்டு போனது. போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்குள்ளும் நுழைய முடியாமல் போய் விட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் சோதனையையும் மேற்கொண்டது. அப்போது வருமான வரித்துறை நடத்திய மிகப்பெரிய அளவிலான சோதனையில் சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 150 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
என்னது சசிகலா வரப்போறாரா? ஒன்றரை வருஷமா இல்லாம இதென்ன புது ட்விஸ்ட்? அலெர்ட் ஆகுங்க.. பறந்த உத்தரவு!
வரி ஏய்ப்பு
இந்த சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் 4430 கோடி ரூபாய் வருமான வரி இணைப்பு செய்ததாக வருமானவரித்துறை தெரிவித்திருந்தது.
பினாமி சொத்துக்கள்
கணக்கில் வராமல் 4500 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் சொத்துக்கள் வாங்கியது தெரிய வந்தது. மேலும் பல இடங்களில் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்திருந்த காரணத்தால் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
வருமான வரித்துறை நடவடிக்கை
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாண்டுகளாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது
இதனையடுத்து ஒவ்வொரு இடங்ககளையும் கண்டறிந்து அந்த ஆவணங்களை கைப்பற்றி முடக்கும் நடவடிக்கையிலும் வருமானவரித்துறை ஈடுபட்டு வந்தது.
ரூ.1600 கோடி சொத்துக்கள்
2019 ஆம் ஆண்டு 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், இதற்கு அடுத்தபடியாக 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்களையும் வருமான வரித்துறை முடக்கியது. கடைசியாக 2ஆயிரம் கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களாவையும் முடக்கப்பட்டது. சுமார் 4 ஆயிரம் கோடி அளவிற்கான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கி வந்தனர்.
ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்
இந்தநிலையில் சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது, இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமானவரித்துறையினர் அந்த சொத்தை முடக்கி உள்ளனர்.
Recommended Video
வருமான வரித்துறை விளக்கம்
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். தற்போது வருமான வரித்துறை அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அந்த நோட்டீசிற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக பயணம் முடிந்து அதிமுகவை மீட்க அரசியல் பயணம் கிளம்பியுள்ள சசிகலாவிற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டு உள்ளது.