நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு
இறுதி வரை பாஜகவுடன் கூட்டணியே வைக்காமல் ஜெயலலிதா மறைந்தார்.
சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து உயிர்போகும்வரை நிரூபித்து காட்டினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!!
கச்சத்தீவு, முல்லை பெரியார், காவிரி பிரச்சனை போன்ற மாநில உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, கெயில், மீத்தேன், நீட் தேர்வு போன்றவைகளாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் போது தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான நிலைபாட்டையே கொண்டிருந்தார் ஜெயலலிதா.
மேற்கண்ட பிரச்சனைகள் எல்லாம் தமிழகத்தை மொத்தமாக சூழ்வதற்கு முன்னமேயே அதாவது 15 வருஷத்துக்கு முன்பேயே ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் ரொம்ப தெளிவாக இருந்தார்.
இஸ்லாமிய சகோதரர்கள்
4.7.1999 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில் முஸ்லீம்கள் வாழ்வுரிமை மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது, "இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்திரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் பாஜக ஆட்சியை நானே
கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ளாது" என்றார்.
நட்பு, மரியாதை
இப்படி சொன்னவாறே இறுதிவரை சாதித்தும் காட்டினார். இத்தனைக்கும் பிரதமர் மோடி மீது ஜெயலலிதா மிகுந்த நட்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதனாலேயே ஒரு பாரத பிரதமரையே முதல்வர் ஒருவர் தன் வீடுவரை வரவழைத்து உபசரித்து பேச முடிந்தது.
தூக்கி வீசினார்
இருந்தாலும் தன் கட்சியின் நலனுக்காகவும், மாநில நலன் சார்ந்த விஷயங்களை அவர் விட்டுக் கொடுத்ததே கிடையாது. அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை என்ற ட்ரேட் மார்க் வசனத்தை தூக்கி வீசியெறிந்து சொன்ன சொல்லை காப்பாற்றியவர் ஜெயலலிதா.
அம்மா வழியில் ஆட்சி?
ஆனால் 15 வருஷம் கழித்து, 2004-க்கு பிறகு பாஜகவுடன் இப்போது அதிமுக கூட்டணி வைத்திருப்பதை சந்தர்ப்பவாதம் என்பதா? 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்பதா தெரியவில்லை. ஆனால் "அம்மா வழியில்தான் இந்த ஆட்சி நடக்கிறது" என்பதை அதிமுகவினரால் இனி தைரியமாக மார்தட்டி சொல்ல முடியுமா? முடியாது.. முடியவே முடியாது..
புதைத்தாகிவிட்டது
கட்சியின் கொள்கை பிடிப்பு, தொலைநோக்கு சிந்தனை, சனாதன தர்மம், என அத்தனையையும் ஜெயலலிதா சமாதியில் அடக்கம் பண்ணும்போதே, சேர்ந்து குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்பதை அதிமுகவினரே நேற்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டனர்!!